கர்நாடகாவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை.. எடியூரப்பா அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடு காரணமாக நுரையீரல் பாதிப்பு, கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளன.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியிருந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதுபற்றி அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இவ்வாறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலம், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறும் டெல்லி ஆகியவை மட்டுமின்றி, ஒடிசா, சிக்கிம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் கர்நாடகா இணைந்துள்ளது. பட்டாசு வெடிக்க தடை விதித்த பாஜக ஆளும் மாநிலம் கர்நாடகாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்டம் தன் கடமையை செய்யும் - பாஜகவின் வேல் யாத்திரைக்கு முதல்வர் பழனிசாமி பதில்
சிக்கிமில் ஆளும் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் சமீபத்தில் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இருப்பினும், தனித்து ஆட்சி செய்வது கர்நாடகாவில்தான்.