ராமர் சிலை சிற்பி அருண் யோகிராஜுக்கு ரூ.12 லட்சம் பாக்கி! கர்நாடகா அரசு மீது பரபர குற்றச்சாட்டு
பெங்களூர்: அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள 5 வயது குழந்தை பருவ ராமர் சிலையை உருவாக்கிய கர்நாடகாவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜுக்கு கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக அரசு ரூ.12 லட்சம் பாக்கி வைத்துள்ள புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்துக்காக அதிகாலை முதலே மக்கள் கோவில் முன்பு திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது குழந்தை பருவராமர் சிலை என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 51 இன்ச் உயரத்தில் 200 கிலோ எடையுடன் சிரித்த முகத்துடன் குழந்தை ராமர் அருள் பாலிக்கிறார். இந்த சிலை பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அந்த சிலையின் கண்கள் அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது. கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தான் இந்த சிலையை வடித்துள்ளார்.
இந்தியாவின் சிறப்பான சிற்பி என ஏற்கனவே அருண் யோகிராஜ் பெயர் பெற்றுள்ள நிலையில் ராமர் சிலையை உருவாக்கியதன் மூலம் உலகளவில் புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் அயோத்தி கோவிலுக்கு ராமர் சிலை செய்து கொடுத்த சிற்பி அருண் யோகிராஜூக்கு கர்நாடகா அரசு 8 ஆண்டுகளாக ரூ.12 லட்சம் பாக்கி வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த 2016ம் ஆண்டில் மைசூரில் ஸ்ரீஜெயசாம ராஜேந்தரிர உடையாரின் சிலை அரசு சார்பில் நிறுவப்பட்டது. கர்நாடகா அரசு உத்தரவின்பேரில் மைசூர் மாநகராட்சி வழங்கிய ஆர்டரின் பேரில் இந்த சிலையை வடித்தவர் அருண் யோகிராஜ். இந்த சிலைக்காக அவருக்கு வழங்க வேண்டிய தொகையில் ரூ.12 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது 8 ஆண்டுகள் ஆகியும் கர்நாடகா அரசு வழங்காமல் இழுத்தடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பாஜக எம்எல்ஏ பசவனகவுடா பட்டில், ‛‛மைசூரில் ஜெயசாமராநே்தரி உடையாரின் சிலை 2016ல் நிறுவப்பட்டது. இந்த சிலையை செய்த அருண் யோகிராஜூக்கு மைசூர் மாநகராட்சி ரூ.12 லட்சம் பாக்கி வைத்துள்ளது. பணம் வழங்காமல் 8 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் இந்த செயல் என்பது மைசூரை மிளிர செய்த யதுவம்ச மன்னர்கள் மற்றும் சிற்பியை அவமதிக்கும் செயல். மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், முதல்வருமான சித்தராமையா அருண் யோகிராஜுக்கான தொகையை வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications