தர்மஸ்தலாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம்.. விசாரணைக்குழு அமைப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழுவை மாநில அரசு அமைத்திருக்கிறது.
தர்மஸ்தலாவில் கடந்த 1998-2014ம் ஆண்டு வரை பணியாற்றிய நபர் ஒருவர் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். அரசு தனக்கும் தனது குடும்பத்திற்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் எனில், பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழுவை மாநில அரசு அமைத்திருக்கிறது. ADGP டாக்டர் பிரணவ் மொஹந்தி தலைமையில், IPS அதிகாரிகள் எம்.எஸ். அனுசெத், சோமியாலாதா மற்றும் ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் SIT குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் பதிவு செய்யப்பட்ட புகாரைத் தவிர, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இது தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் இந்த குழு விசாரிக்கும்.
பின்னணி என்ன?
அண்மையில், கோயில் ஒன்றில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் உடல்களை தான் புதைத்ததாக கூறியிருந்தார். மேலும் உடல்களில் ஒன்றை தோண்டி எடுத்து காவல்துறையிடமும் ஒப்படைத்தார். இதையடுத்து இந்த வழக்கை SIT விசாரிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். மாநில மகளிர் ஆணையமும் SIT விசாரணைக்கு பரிந்துரைத்தது.
தூய்மை பணியாளரின் புகாரை நிஜமாக்கும் வகையில் மற்றொரு புகாரும் வந்திருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் இந்த புகாரை அளித்திருக்கிறார். தனது மகள் கடந்த 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோவிலுக்கு சென்ற பிறகு காணாமல் போய்விட்டதாக தெரிவித்திருந்தார். அவர் மணிப்பாலில் எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். இந்த புகாரும் இந்த வழக்கில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் காவல்துறையும், புகார்தாரரின் வழக்கறிஞர்களும் முரணான அறிக்கைகளை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகார்தாரர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று காவல்துறை கூறியது. ஆனால் அவர் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இந்திய தலைமை நீதிபதிக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் காவல்துறையிடம் புகார்தாரர் அளித்த வாக்குமூலம் கசிந்துவிட்டதாகவும், இது விசாரணையின் புனிதத்தை பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட பல முக்கிய பிரமுகர்கள், கொலைகள் குறித்து SIT விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதெ சமயம் கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, இந்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA) ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு கர்நாடகா மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் யார்? எதற்காக கொல்லப்பட்டார்கள்? இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு வெளியில் வரவில்லையா? ஏன்? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்கிற கேள்விகளுக்கு விசாரணையில்தான் பதில் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications