கர்நாடகா: ஹனுமன் பெயரால் கலவரத்தை தூண்டி ஓட்டுகளை அறுவடை செய்ய பாஜக சதி.. சித்து, டிகேஎஸ் குமுறல்!
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் மதவன்முறைகளை தூண்டி ஓட்டுகளை அறுவடை செய்யும் சதி நோக்கத்துடனேயே பாஜகவினர் ஹனுமன் கொடி விவகாரத்தை தூண்டி விடுவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22-ந் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரேகோடு கிராமத்தில் பாஜக ஆதரவாளர்கள் 108 அடி உயர கம்பத்தை நட்டு அதில் ஹனுமன் கொடி ஏற்ற முடிவு செய்தனர்.

இது தொடர்பாக கொரேகோடு கிராம பஞ்சாயத்திடம் அனுமதி கோரப்பட்டது. கர்நாடகாவில் அரசுக்குரிய இடத்தில் தேசிய கொடி, கர்நாடகாவின் கன்னட கொடியை தவிர வேறு எதனையும் ஏற்ற அனுமதி இல்லை என கிராம பஞ்சாயத்து மறுத்தது. இதனையும் மீறி 108 அடி உயரத்தில் ஹனுமன் கொடி ஏற்றப்பட்டது. இங்கிருந்துதான் பிரச்சனையே தொடங்கின. அரசு நிலத்தில் தடையை மீறி ஏற்றப்பட்ட ஹனுமன் கொடியை மாவட்ட நிர்வாகம் கீழே இறக்கிவிட்டு தேசிய கொடியை ஏற்றியது. இதற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், நான் ஒரு இந்து. பாஜக எங்களை இந்து விரோதிகளாக காட்ட முயற்சிக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மண்டியாவில் மத வன்முறைகளைத் தூண்டுவதற்கு பாஜக முயற்சிக்கிறது. இதனை நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டோம் என்றார்.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், மண்டியாவில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. மண்டியாவில் அரசியல் செய்வதற்காகவே பாஜக அங்கு ஹனுமன் கொடி விவகாரத்தை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. பாஜகவின் இந்த முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது என்றார்.












Click it and Unblock the Notifications