நிரம்பியது கேஆர்எஸ் அணை: கங்கை ஆரத்தி போல ‘காவிரி ஆரத்தி’ .. மோடி தொகுதிக்கு போகும் கர்நாடகா டீம்!
பெங்களூர்: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் கங்கை ஆரத்தி நிகழ்ச்சி நடத்துவதை போல காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையை இன்று நேரில் பார்வையிட்ட அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், காவிரி ஆரத்தி ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் அணைகள் நிரம்பி இருக்கின்றன. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. இன்று காலை அணையின் நீர்மட்டம் 123.20 அடியாக உயர்ந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 60,016 கன அடியாகவும் அணையில் இருந்து வினாடிக்கு 52,020 கன அடிநீரும் திறக்கப்பட்டும் வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையை துணை முதல்வர் டிகே சிவகுமார், வேளாண்துறை அமைச்சர் செலுவராயசாமி ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் டிகே சிவகுமார் கூறியதாவது: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதே போல காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். நீர்வளத்துறை, அறநிலையத்துறை இணைந்து காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தும். இப்பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த காவிரி ஆரத்தி நிகழ்ச்சி உதவும்.
காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று கங்கை ஆரத்தி நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆய்வு செய்யும். வாரணாசியில் இருந்து திரும்பிய பின்னர் இந்த குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கை குறித்து அமைச்சரவையில் விவாதித்து ஒப்புதல் பெறப்படும்.
வாரணாசியில் இருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு காவிரி ஆரத்தி நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்படும். அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் காவிரி ஆரத்தியை காணும் வகையிலான ஒரு இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
பாகினா பூஜை: இதனிடையே கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் வரும் 27-ந் தேதி இந்த அணைகளில் பாகினா பூஜைகள் நடத்தப்பட உள்ளன. கர்நாடகாவில் அணைகள் நிரம்புகிற போது இந்த் பாகினா பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாம். பாகினா பூஜையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications