கர்நாடகாவில் இந்தி திணிப்பு கிளர்ச்சி:சட்டசபை வளாகத்தில் மாஜி முதல்வர் குமாரசாமி தலைமையில் போராட்டம்
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக அரசு இந்தி மொழி தினத்தை - இந்தி திவாஸ் 2022 கொண்டாடுவதற்கு எதிராக அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தி மொழி தினத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை மொழியை திணிப்பதிலும் பாஜக அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கு இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தி திணிப்பு எதிர்ப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளாவிலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீவிரமாக உள்ளது.
இந்தி மொழி தின நாளை கர்நாடகா பாஜக் அரசு கொண்டாடி வருகிறது. இதற்கு எதிராக கர்நாடகாவில் ஆண்டுதோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கன்னட மொழி அமைப்பினரால் இந்தி தார்பூசி அழிக்கப்படுவது; இந்தி பேனர்கள் கிழித்து எறியப்படுவது என ஒவ்வொரு ஆண்டும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டும் கர்நாடகாவில் இந்தி மொழி தினத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி கடிதம் ஒன்றை அனுப்பி எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மேலும் இந்தி திணிப்புக்கு எதிராக கர்நாடகா முழுவதும் செப்டம்பர் 14-ல் போராட்டம் நடத்தப்படும் எனவும் குமாரசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இந்தி மொழிதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு இந்தி மொழி பெருமை தேடிக் கொடுத்துள்ளது. இந்தி மொழியின் எளிமை, தனித்தன்மை அனைவரையும் ஈர்க்கிறது. இந்தி மொழி மேம்பாட்டுக்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறியுள்ளார். இதேபோல் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்கும் பாலம். அனைத்து இந்திய மொழிகளுக்கு இந்தி மொழி நட்பு மொழி. இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி வளர்ச்சிகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என கூறியுள்ளார்.
இதனிடையே இந்தி மொழி தின கொண்டாட்டத்துக்கு எதிராக கர்நாடகா சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் இன்று போராட்டம் நடத்தினர். கர்நாடகா சட்டசபை காந்தி சிலை முன்பாக ஒன்று திரண்ட ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்,எம்.எல்.சி.க்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்தி மொழி திணிப்புக்கு எதிரான பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications