ரத்தக்கறை படிந்த ஆர்சிபி ஐபிஎல் கோப்பை.. சரமாரியாக கேள்வி கேட்ட கர்நாடக உயர் நீதிமன்றம்.. பளீர்!
பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசை கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளது. ஜூன் 4-ம் தேதி ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூர் கூட்ட நெரிசல்: கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
பெங்களூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. அரசாங்கம் இந்த நிகழ்வை கையாண்ட விதம் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியதுடன்.. மாநில அரசு இதில் ஏன் பொறுப்புடன் செயல்படவில்லை என்றும் கேள்விகளை எழுப்பியது.

கர்நாபாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் 105 (கொலைக்குக் காரணமான குற்றமில்லாத மரணம்), 115(2) (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), 118(1) (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்துதல்), 118(2) பிரிவு 3(5)-உடன் இணைந்து (பொதுவான நோக்கத்திற்காக பல நபர்களால் செய்யப்படும்போது தானாக முன்வந்து பலத்த காயம் ஏற்படுத்துதல்), 190 (சட்டவிரோத கூட்டம்), 132 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்), 125(a) (பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல்), மற்றும் 125(b) (மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநில போலீசார் விளக்கம் அளித்தனர் . அதோடு கூட்ட நெரிசல் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றப்பட்டதாக நீதிமன்றத்திற்கு மாநில அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒன்பது முக்கிய கேள்விகளை எழுப்பியது:
- வெற்றி விழாவை நடத்தியது யார், எப்போது முடிவு செய்யப்பட்டது? எந்த வகையில் முடிவு செய்யப்பட்டது?
- போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
- பொதுமக்கள்/கூட்டத்தை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
- நிகழ்வு நடைபெறும் இடத்தில் என்ன மருத்துவ மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டிருந்தன?
- விழாவின்போது எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று முன்கூட்டியே ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டதா?
- காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டதா? இல்லையென்றால், ஏன்?
- காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவு நேரம் ஆனது?
- 50,000-க்கும் அதிகமானோர் கூடும் விளையாட்டு நிகழ்வு அல்லது இது போன்ற கொண்டாட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் நிலையான இயக்க நடைமுறை (SOP) உருவாக்கப்பட்டதா?
- நிகழ்வை நடத்த ஏதேனும் அனுமதி பெறப்பட்டதா?
இதற்கு பதிலளிக்க அரசு அவகாசம் கோரியுள்ளது. மேலும், சீலிடப்பட்ட உறையில் பதில்களை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நெரிசல் தொடர்பாக கர்நாடக காவல்துறை பதிவு செய்துள்ள FIR-ல், குற்றம் சாட்டப்பட்டவர்களான RCB உரிமையாளர்கள், டிஎன்ஏ நிறுவனம் மற்றும் KSCA நிர்வாகக் குழுவினர் ஆகியோர் தேவையான அனுமதியின்றி வெற்றி விழாவை ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கபன் பூங்கா காவல் நிலையத்தில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரோலண்ட் கோம்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், RCB உரிமையாளர்கள், KSCA மற்றும் DNA மீது BNS பிரிவு 125(a) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் அளித்த புகாரில், "சமூக ஊடகத்தில் RCB வெளியிட்ட பதிவைப் பார்த்துவிட்டு எனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தைப் பார்க்க வந்தேன். திறந்த பேருந்தில் ஊர்வலம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நான் 17-வது கேட் வழியாக உள்ளே நுழையும்போது, அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, அதில் எனது தோள்பட்டை மூட்டு விலகியது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications