சித்தராமையாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்! முடா வழக்கு விசாரணை.. தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்!
பெங்களூர்: முதல்வர் சித்தராமையா மீதான முடா ஊழல் வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் லோக் ஆயுக்தாவிடம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது பூதாகரமாக வெடித்துள்ளது.

முடா விவகாரம்:
இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்தார். ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை சித்தராமையாவின் மனைவி ஏற்கனவே திருப்பி அளிக்கத் தயார் எனச் சொல்லிவிட்ட போதிலும், விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரித்து வரும் சூழலில், கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்து வரும் இந்த ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.
தடை விதிக்க மறுப்பு:
இந்த மனுவை விசாரித்த போது தான் லோக் ஆயுக்தா விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை நாளைக்குள் சமர்ப்பிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி எம் நாகபிரசன்னா கூறுகையில், "இப்போது வரை இந்த வழக்கில் நடந்த விசாரணை விவரங்களை லோக் ஆயுக்தா பதிவு செய்ய வேண்டும். அதேநேரம் லோக் ஆயுக்தா விசாரணைக்குத் தடை இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்தலாம். லோக் ஆயுக்தா போலீஸ் ஐஜி இந்த விசாரணையை மேற்பார்வையிடுவார். இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் போது, முந்தைய நாளே உரிய ரிப்போர்ட்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுவை அடுத்த விசாரணை தேதிக்குள் முடிக்க வேண்டும்" என்றார்.
வாதம்:
முன்னதாக விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், சந்தேகத்திற்குரிய நபரையோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரையோ வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்க முடியாது என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த உயர் நீதிமன்ற நீதிபதி, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து வாதங்களில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து தனது வாதத்தைத் தொடர்ந்த மணீந்தர் சிங், "பொதுமக்களுக்கு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை தேவை. இதற்காக நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணையே நமக்கு அவசியம். போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது, விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை நீதிமன்றங்கள் அடிக்கடி உறுதி செய்ய வேண்டி இருக்கிறது.. அதிகார மட்டத்தில் இருக்கும் சிலர் வழக்கு தொடர்பான கோப்புகளை லோக் ஆயுக்தாவிடமிருந்து பிடுங்கியுள்ளன" என்ற பரபர வாதத்தை முன்வைத்தார்.
நீதிமன்றம் உத்தரவு:
இந்த வாதத்தைக் கேட்ட பிறகே, வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட டாக்குமெண்ட்டுகளை சமர்ப்பிக்கக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணை குறித்த ரிப்போர்ட்டை அடுத்த விசாரணைக்கு முந்தைய நாளே சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications