கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப்.. ஶ்ரீராம் சேனா, பாஜக தலைவர்கள் தலையை வெட்டினால் சன்மானம் என அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வலதுசாரி அமைப்புகளான ஶ்ரீராம்சேனா மற்றும் பாஜக மாநில தலைவர்களின் தலையை வெட்டினால் சன்மானம் என இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்கள் உடையான ஹிஜாப் அணியும் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் கல்லூரிகளில் மத அடையாளங்களை அணிவதற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
தற்போது ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் உப்பினங்கடியில் கல்லூரி மாணவிகள் தடையை மீறி ஹிஜாப் உடை அணிந்து வந்தனர். இதனால் ஹிஜாப் அணிந்த 24 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஹிஜாப் விவகாரம் விவாதமாகி இருக்கிறது.
இந்நிலையில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வலதுசாரி அமைப்பான ஶ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக், கர்நாடகா பாஜகவை சேர்ந்த யாஷ்பால் சுவர்னா ஆகியோரது தலைகளை வெட்டுவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ஹிஜாப் பிரச்சனையை தீவிரமாக்கியுள்ளது.
ஓயாத பிரச்சனை! ஹிஜாப் அணிய அனுமதிகோரி போராட்டம்! கர்நாடகத்தில் 23 மாணவிகள் சஸ்பெண்ட்!
இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாஷ்பால் சுவர்னா, சமூக வலைதளங்களில் இத்தகைய மிரட்டல்கள் வருவது பொதுவானதுதான். நாம் தேசத்துக்காக பணியாற்றுகிறோம். ஆனால் தேசவிரோதிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இத்தகைய மிரட்டல்களை விடுத்து கொண்டிருக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. நானோ பிரமோத் முத்தலிக்கோ எங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளமாட்டோம் என்றார்.