மாதம் 1 நாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு.. கர்நாடகா அரசு -தனியார் ஊழியர்கள் ஹேப்பி.. இதோ ரூல்ஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விடுமுறையை 18 வயது முதல் 52 வயது வரையிலான அரசு - தனியார் பெண் பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்தெந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் என்பது பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாக செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் நீண்டகாலமாக அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை இருந்து வருகிறது.

இதையடுத்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாதம் ஒருமுறை என்று மொத்தம் 12 நாட்கள் அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை கர்நாடகா அரசு ஏற்றது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி 18 வயது முதல் 52 வயது நிரம்பிய பெண் ஊழியர்கள் மாதம் ஒருமுறை மாதவிடாய் விடுமுறையை எடுத்து கொள்ளலாம். இதற்கு எந்த மருத்துவ ஆவணங்களையும் காண்பிக்க வேண்டியது இல்லை. இந்த விடுமுறையை எடுக்கும்போதும் சம்பளம் பிடிக்கப்படாது. அதேபோல் ஒருமாதத்தில் விடுமுறை எடுக்காவிட்டால் அதனை இன்னொரு மாதத்தில் சேர்த்து எடுக்க முடியாது.
நிரந்தரம், ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் இது பொருந்தும். குறிப்பாக அரசு துறையில் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாறாக தனியார் துறையை எடுத்து கொண்டால் கர்நாடகா தொழிற்சாலைகள் சட்டம், கர்நாடகா கடைகள், வணிக நிறுவனங்கள் சட்டம், தோட்ட தொழிலாளர்கள் சட்டம், பீடி தொழிலாளர்கள் சட்டம், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.












Click it and Unblock the Notifications