தேர்தல் ரிசல்ட் வரும் முன்பே கர்நாடக கூட்டணி அரசு மீது விழுந்த குண்டு! பாஜகவுக்காக வேலை பார்த்த மஜத
Recommended Video
பெங்களூர்: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் நடுவே, உரசல் ஏற்பட்டுள்ளது.
மஜதவை சேர்ந்த மூத்த தலைவரும், அமைச்சருமான, ஜி.டி.தேவகவுடா இதற்கான, நெருப்பை கொளுத்திப் போட்டுள்ளார். மைசூர் தொகுதியில் போட்டியிட்ட கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர், சி.ஹெச்.விஜயசங்கருக்கு, மஜதவினர் ஆதரவு அளிக்காமல், பாஜக வேட்பாளர் பிரதாப் சிம்ஹாவிற்குத்தான் ஆதரவு அளித்து தேர்தல் பணியாற்றினார்கள் என்று சொல்லிவிட்டார் ஜி.டி.தேவகவுடா.
இந்த விஷயத்தில் மஜத, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமும் தவறு உள்ளது என்றுதான் நான் சொல்வேன். தனித்தனியாக தங்கள் கட்சி வேட்பாளர்களையே களமிறக்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜி.டி.தேவகவுடா.

குண்டு போட்ட அமைச்சர்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மிக அதிக காலம் எடுத்தது. தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்பே, எங்கள் தலைவர்கள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்திருக்க வேண்டும். சில இடங்களில் கூட்டணி நன்கு செயல்பட்டது. பல இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், மஜத தொண்டர்கள், பாஜக வேட்பாளர்களுக்கும்தான் தேர்தல் வேலை பார்த்துள்ளனர். இவ்வாறு தெரிவித்து குண்டு போட்டுள்ளார் ஜி.டி.தேவகவுடா.

உள்குத்து
மைசூர் உள்ளிட்ட மஜத பலமாக உள்ள சில பகுதிகளில் உள்ள தொகுதிகளை, தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. எனவே, காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தொண்டர்களே உள் குத்து வேலையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைத்தான் வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார் ஜி.டி.தேவகவுடா.

குமாரசாமி குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு மே மாதம், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபடுவது, இது முதல் முறை கிடையாது. எனது ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் சதி செய்கிறது என்று சாட்சாத் முதல்வர் குமாரசாமியே பொது மேடையில் கண்ணீர் வடித்த சம்பவம் எல்லாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கிண்டல்
இதனிடையே பாஜக தலைவர்களில் ஒருவரான ஆர்.அசோக் கூறுகையில், கர்நாடகாவில் மோடி அலை வீசுகிறது. மாநில மக்களின் சார்பில் ஜி.டி.தேவகவுடா குரல் கொடுத்துள்ளார் என்பதுதான் இதன் பொருள். மஜத தொண்டர்கள், நாட்டு நலனுக்காக பாஜகவுக்கு உழைத்துள்ளார்கள். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications