மிரட்டி ஓரினச் சேர்க்கை.. பிரஜ்வல் சகோதரர் கர்நாடகா எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா அதிரடி கைது!
பெங்களூர்: ஜேடிஎஸ் கட்சித் தொண்டர் சேத்தனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கர்நாடகா மாநில எம்.எல்.சி சூரஜ் ரேவண்ணா அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டார். கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் - மத்திய அமைச்சர் குமாரசாமி சக்போதரர்) மகன் சூரஜ். இவரது சகோதரர் பிரஜ்வல் ரேவண்ணா 3,000 ஆபாச வீடியோ விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன்கள் பிரஜ்வல், சூரஜ். இவர்களில் பிரஜ்வல், ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தவர். தற்போது முடிவடைந்த லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பிரஜ்வல். லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக பிரஜ்வல் எடுத்து வைத்திருந்த 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி ஓடினார்.

பிரஜ்வல் மீது புகார் தெரிவித்த பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலையானார். பிரஜ்வல் தாயார் பவானியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரஜ்வல் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரஜ்வல் சகோதரர் சூரஜ் மீது ஓரினச் சேர்க்கை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் தொண்டர் சேத்தன் என்பவர் இந்த புகாரைத் தெரிவித்தார். முதலில் இது பணம் பறிக்க சேத்தன் கொடுத்த புகார்; ரூ5 கோடி பேரம் பேசினார் சேத்தன் என சூரஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சேத்தன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பெங்களூரில் கர்நாடகா மாநில டிஜிபியிடம் சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்தார் சேத்தன். இதனடிப்படையில் சூரஜ் ரேவண்ணா மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதாவது,
ஐபிசி 377-வது பிரிவு - இயற்கைக்கு மாறான உறவு
ஐபிசி 342-வது பிரிவு - சட்டவிரோதமாக அடைத்து வவைத்தல்
ஐபிசி 506-வது பிரிவு - மிரட்டல்
ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சூரஜ் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் சூரஜ் ரேவண்ணா, ஓரினச் சேர்க்கைக்காக தம்மை மிரட்டிய ஆடியோ இருப்பதாகவும் சேத்தன் கூறியிருந்தார். இதனையடுத்து ஹாசன் போலீசார் சூரஜ் ரேவண்ணாவை நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அப்போது சூரஜ் ரேவண்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. ரேவண்ணாவின் செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று சூரஜ் ரேவண்ணாவை ஹாசன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாலியல் சர்ச்சையில் ரேவண்ணாவின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications