போச்சா.. போச்சா... செல்போன் பேச்சு லீக்- மகனால் முதல்வர் பதவி அம்போவாகுமோ? பதற்றத்தில் சித்தராமையா!
பெங்களூர்: அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் எந்த பொறுப்பிலுமே இல்லாத மகன் யதீந்திராவும் பேசும் செல்போன் உரையாடல்கள் அடங்கிய வீடியோ பதிவு கர்நாடகா மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளன. இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட சித்தராமையா, பணி மாறுதல்களுக்கு பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் அரசியலைவிட்டு விலகுகிறேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பதவி ஏற்ற காலத்தில் இருந்தே ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக முனைப்பு காட்டுகிறது. தற்போது பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட பேரங்களை பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தளம் மும்முரமாக நடத்துகிறது என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. லோக்சபா தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிறது பாஜக கூட்டணி.

செல்போன் பேச்சு லீக்: இந்த களேபரங்களுக்கு நடுவே முதல்வர் சித்தராமையா, மகன் யதீந்திரா இருவரும் அரசு அதிகாரிகள் பணிமாற்றம் தொடர்பாக பேசும் செல்போன் உரையாடல் வீடியோ ஒன்றை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
குமாரசாமி: இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த கர்நாடகா முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி, எடியூரப்பா முதல்வராக இருந்த அவரது மகன் விஜயேந்திராவை சூப்பர் சிஎம் என விமர்சித்தவர் சித்தராமையா. இப்போது யதீந்திராவின் செல்போன் பேச்சு மூலம் யார் சூப்பர் சிஎம் என்பது தெளிவாகிவிட்டது. இந்த செல்போன் உரையாடல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றார்.
பாஜக: கர்நாடகா தலித் அணி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், செல்போன் பேச்சு உரையாடல் குறித்து சித்தராமையா என்ன சொல்லப் போகிறார்? சித்தராமையா முதல்வராக பதவி ஏற்ற உறுதி மொழிக்கு எதிராக செயல்படுகிறார்; ஆகையால் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
சித்தராமையா விளக்கம்: இது குறித்து விளக்க அறிக்கை வெளியிட்ட சித்தராமையா, குமாரசாமியின் காமாலை கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகவே தெரிகிறது. என்னுடைய வருணா தொகுதி மேம்பாட்டு பணிகளை மகன் யதீந்திராதான் கவனித்து வருகிறார். குமாரசாமி அரசியலுக்கு வந்த நாள் முதலே எனக்கு எதிரான தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார். பணி மாறுதலுக்காக பணம் பெற்றதாக நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகவும் தயார் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications