தூக்கில் தொங்கிய சாமியார்.. கர்நாடக மடங்களில் பாலியல் கொடுமை! வெளியான “லிஸ்ட்” -விஸ்வரூபமான விவகாரம்
பெங்களூரு: பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சிவமூர்த்தி ஷரனாருவை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொரு லிங்காயத்து சாமியார் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் லிங்காயத்து மதத்தினரின் முருகமடம் இயங்கி வருகிறது. இங்கு மடாதிபதியாக செயல்பட்டு வருபவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மடாதிபதி மீது புகார்
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ வழக்கு
இதனை தொடர்ந்து மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மடாதிபதிக்கு உடந்தையாக இருந்து வந்ததாக விடுதியின் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

புகாருக்கு மறுப்பு
கர்நாடகாவில் அதிக செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த புகார்கள் உண்மைக்கு எதிரானவை. இதன் பின்னணியில் முன்னாள் எம்எல்ஏவும், மடத்தின் நிர்வாக அதிகாரி எஸ்கே பசவராஜன் இருக்கின்றனர்." என என்.விஸ்வநாத் தெரிவித்தார்.

மடாதிபதி கைது
இந்த விவகாரத்தில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை கர்நாடக அரசு இதுவரை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து மடத்தின் விடுதி காப்பாளரை சில நாட்களுக்கு முன் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ஒன்றாம் தேதி சாமியார் சிவமூர்த்தி ஷரனாருவை போலீசார் கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

சாமியார் தற்கொலை
இந்த நிலையில் கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ குரு மதிவலேஷ்வர் மடத்தில், பசவ சித்தலிங்க சுவாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அவரது அறையில் தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் அவர் என்ன எழுதி இருந்தார் என்ற விபரத்தை காவல்துறை வெளியிடவில்லை.

காரணம் என்ன
சாமியார் சிவமூர்த்தி ஷரனாருவின் பாலியல் வன்கொடுமை வெளியானதை தொடர்ந்து 2 பெண்கள் கர்நாடக மடங்களில் சாமியார்கள் செய்யும் பாலியில் குற்றங்கள் குறித்து பேசிய பேசிய வீடியோ ஒன்று வெளியானதாகவும் அதில் ஒரு பெண் தன்னுடைய பெயரையும் தெரிவித்ததால் சித்தலிங்க சுவாமி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications