கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அதே ரூல்ஸ் தொடரும்.. வாகனங்களுக்கு என்ன கட்டுப்பாடு?
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகம் முழுவதும் முழு ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள லாக்டவுன் நடைமுறைகள் அப்படியே தொடரும் என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவில் தற்போது உள்ள லாக்டவுன் ஜூன் மாதம் 7ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த முதல்வர் எடியூரப்பா, மாநிலத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து கொண்டு வந்தாலும் கூட ஊரகப் பகுதிகளில் இன்னமும் அதிக அளவுக்கு பாதிப்பு இருக்கிறது, எனவே மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் லாக்டவுனை நீட்டித்துள்ளது கர்நாடக அரசு.

கடைகள் திறப்பு நேரம்
தற்போது காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை கடைகளை திறந்து வைக்க அனுமதியுள்ளது. ஆனால், மதியம் 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பல முனைகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு காலகட்டத்திலும் இப்போது உள்ள விதிமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது குறித்த முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

கொரோனா குறைகிறது
மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஒப்பிட்டால் கர்நாடகாவில் தற்போது சுமார் 65 சதவீதம் அளவுக்கு நோய் பரவல் குறைந்துள்ளது. ஆனால் இப்போது ஊரடங்கு உத்தரவை தளர்த்தினால் மீண்டும் நோய் பாதிப் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு முன் கஷ்டமான நிலை உருவாகிவிடும் என்று மருத்துவ வல்லுனர்கள் குழு முதல்வர் எடியூரப்பாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்று ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல கட்ட ஊரடங்கு
ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது கர்நாடக அரசு. ஆனால் விதிமுறைகளை மேலும் அதிகப்படுத்தி மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் நோய் பாதிப்பு குறைந்ததை கருத்தில்கொண்டு ஜூன் மாதம் 7ம் தேதி வரை மறுபடி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

நாடு முழுக்க நிலவரம்
நாடு முழுக்க தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது. இதற்கு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பது காரணமாக கூறப்படுகிறது. எனவே ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கை பின்பற்றுமாறு மத்திய அரசு, அறிவுரை வழங்கி இருந்தது. இதன்படி கர்நாடக அரசு முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

தமிழக வாகனங்கள்
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து உரிய ஆவணங்களோடு வந்தால் கர்நாடகாவிற்குள் வாகனங்களுக்கு அனுமதியுள்ளது. ஆனால் இ-பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ காரணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கர்நாடகா வர முடியும். அதே நேரம் ரயில்கள், விமானத்தில் கர்நாடகாவிற்குள் செல்ல தடையில்லை. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காலை 6-10 மணிக்குள் கடைகளுக்கு செல்ல வாகனங்களை பயன்படுத்த அனுமதி உள்ளது.












Click it and Unblock the Notifications