ஒரு ஆண் குழந்தை இல்லையே.. 4 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு தந்தை தற்கொலை.. கர்நாடகாவில் பரிதாபம்
பெங்களூர்: தொடர்ச்சியாக 4 பெண் குழந்தைகளை பெற்றதால் விரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் குழந்தைக்காக மிகவும் ஏங்கித் தவித்ததாகவும், ஆனால் கடைசி வரை தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
21-வது நூற்றாண்டிலும் கூட ஆண் பிள்ளை மோகத்தால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அவரது அறியாமையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண் குழந்தை மோகம்..
ஒருகாலத்தில், பெண் குழந்தைகளை வெறுக்கின்ற சமூகமாகவே இந்தியா இருந்திருக்கிறது. பெண் குழந்தைகள் பிறப்பது சாபம் என்று சொல்லப்பட்ட காலமும் உண்டு. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில், ஏன் தமிழகத்திலேயே கூட ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் பெண் குழந்தைகள் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடும் மோசமான கலாச்சாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் பிறந்ததுமே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றன. 1990-கள் வரை பரவலாக காணப்பட்ட இந்த முறை, அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளாலும், மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வாலும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சூழலில், கர்நாடகாவில் ஒருவர் பெண் பிள்ளைகள் பிறந்ததற்காக தற்கொலை செய்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

தொடர்ந்து பெண் குழந்தைகள்..
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஸ்ரீநிவாசபுரா தாலுகாவைச் சேர்ந்தவர் லோகேஷ் (38). வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வந்த இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீஷா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், லோகேஷுக்கு ஆண் குழந்தை தனக்கு வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மீண்டும் கர்ப்பம்..
முதலில் பெண் குழந்தை பிறந்ததால், ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்தால்தான் அவர்கள் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்றனர். ஆனால் மூன்றுமே பெண் குழந்தைகளாகி போனது. இந்நிலையில், 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஸ்ரீஷா கர்ப்பம் அடைந்தார். இந்த முறை தனக்கு நிச்சயம் பெண் குழந்தைதான் பிறக்கும் என லோகேஷ் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஏமாற்றம் - தற்கொலை
இதனிடையே, இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் விரக்தியின் விளிம்புக்கே லோகேஷ் சென்றார். 4 பெண் குழந்தைகளை எப்படி கரை சேர்ப்பது என நண்பர்களிடம் அவர் புலம்பியுள்ளார். இந்த சூழலில், நேற்று முன்தினம் தனது அறையில் லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 பெண் குழந்தைகள் பிறந்த விரக்தியில் தான் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications