500 கோடியில் திருமணம்.. 9 நாட்களுக்கு அசத்தல் மெனு.. கலக்கும் கர்நாடக அமைச்சர்.. மோடிக்கும் அழைப்பு
பெங்களூர்: கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் செலவில், 9 நாட்கள் கோலாகலமாக திருமண விழாவை நடத்தி வருகிறார்.
Recommended Video
தாலி கட்டும் வைபவ தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் இந்த திருமண விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீராமுலு.... இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே! ஆம்.. பெல்லாரி ரெட்டி சகோதரர்களுக்கு மிக நெருக்கமான நண்பர்தான் இவர்.
ரெட்டி சகோதரர்கள்
இவரது பெயரும் சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரத்தில் அடிபட்டது. ஆனால் ரெட்டி சகோதரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீராமுலு மீது அதுபோன்ற எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், நகமும் சதையும் என்பார்களே, அதுபோன்ற ஒரு நெருங்கிய நட்பு ஸ்ரீராமுலு மற்றும் ரெட்டி சகோதரர்கள் இடையே இருக்கிறது.
ஜனார்த்தன ரெட்டி மகள்
2016ம் ஆண்டு ரெட்டி சகோதரர்களில் ஒருவரும் மற்றும் சட்டவிரோத குவாரி தொழிலில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களில் முக்கியமானவர்களில் ஒருவருமான, ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு 500 கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டது, என்று அப்போது சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.
9 நாட்கள் வைபோகம்
இப்போது ஸ்ரீராமுலு வீட்டில் விசேஷம். கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் இவரது மகள் ரக்ஷிதா மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவருக்கும் மார்ச் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி 9 நாள் திருமண வைபோகம் ஏற்கனவே தொடங்கி களைகட்டியுள்ளது.
ரூ.500 கோடி
ஸ்ரீராமுலு அலுவலக வட்டார தகவல் படி, இந்த திருமணத்திற்காக 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி திருமண விழா தொடங்கிவிட்ட நிலையில், தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. மார்ச் 5ஆம் தேதி பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் நடைபெறக்கூடிய திருமண விழாவில் பங்கேற்க வருமாறு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு ஸ்ரீராமுலு ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கியுள்ளார். அவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேலஸ் மைதானம்
பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானம் என்பது பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்துள்ள ஒரு பகுதி. ஸ்ரீராமுலு மகள் திருமணத்தை முன்னிட்டு, பல்வேறு கோவில்களின் மாதிரியில், செட், அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தத்ரூபமாக அந்தந்த பிரபல கோவில்களுக்கு நேரில் சென்றது போன்ற உணர்வை தரும் வகையிலான செட் அமைக்கப்பட்டு, அப்பணிகளில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விமரிசை
மணப்பெண்ணின் காஸ்டியூம் டிசைனர், சானியா சர்தாரியா என்று பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திருமணத்தின்போது மேக்கப் பணிகளில் ஈடுபட்ட ஆர்ட்டிஸ்டுகள், ஸ்ரீராமுலு மகளுக்கும் மேக்கப் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். நாளை மெஹந்தி திருவிழா நடைபெற உள்ளது. மார்ச் நான்காம் தேதி முகூர்த்தத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பல சினிமா ஸ்டார்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடகா முழுக்கவே இப்போது இந்த காஸ்ட்லி கல்யாணம் பற்றி தான் பேச்சு ஓடிக் கொண்டு இருக்கிறது.