Karnataka minister: வாக்காளர் முறைகேடு நடந்தபோது காங்கிரஸ் ஏன் தடுக்கவில்லை என்று கேட்ட கர்நாடக அமைச்சர் ராஜினாமா!
பெங்களூர்: ஓட்டு திருட்டு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். இதனை அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் விமர்சித்திருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. காங்கிரஸின் கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாதான் ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்திருந்தார். தற்போது அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் குறிப்பாக பெங்களூர் மத்திய மக்களவை தொகுதியில் ஓட்டு திருட்டு நடந்திருப்பதாகவும், இதற்கு பாஜவுக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வெறுமென குற்றச்சாட்டாக இல்லாமல் இதற்கான ஆதரங்களாக சில தகவல்களையும் ராகுல் காந்தி முன்வைத்திருந்தார்.
கர்நாடகாவின் பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் சுமார் 1,00 ,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்றும், இந்த தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமார் 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவையாக இருப்பதாகவும் கூறி சில டேட்டாக்களை ஆதாரமாக முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறம், அக்கட்சியின் அமைச்சர் ராஜண்ணா, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் மீது விமர்சனங்களை அடுக்கியிருந்தார். இதனால் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைமை, அவரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, இராஜண்ணா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இராஜண்ணாவின் கருத்துக்கள், தனது கட்சியையே குறை கூறுவதாக அமைந்ததால், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
முதலில் ராஜினாமா செய்ய மறுத்த இராஜண்ணா, "நான் முதலமைச்சருடன் பேசுவேன். அதுவரை நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் சொல்வதால் மட்டும் ஏன் நான் ராஜினாமா செய்ய வேண்டும்?" என்று கூறியிருந்தார். இருப்பினும், அவரைப் பதவி நீக்கம் செய்ய தலைமை உத்தரவிட்டதை அடுத்து, இராஜண்ணா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதனை முதலமைச்சர் சித்தராமையா ஏற்றுக்கொண்டு, ஆளுநருக்கு அனுப்பினார்.
"காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் நம் கண் முன்னால் நடந்தன. ஆனால் அவை முறையாக கண்காணிக்கப்படவில்லை. இதை நாம் கண்காணிக்காதது நமக்கு வெட்கக்கேடானது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் வரைவு கட்டத்தில் கட்சி மௌனமாக இருந்தது. அவர்கள் செய்யக்கூடாததைச் செய்தார்கள். இருப்பினும், காங்கிரஸ் சரியான நேரத்தில் ஆட்சேபனைகளை எழுப்பத் தவறிவிட்டது" என்று இராஜண்ணா கூறியிருந்தார் என்பத குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications