அமைச்சர் பதவி கேட்டால் அவ்வளவு தான்.. கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மேலிடம் வார்னிங்
பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் 20 காலியிடங்கள் உள்ளன. இதனால் அமைச்சர் பதவிக்காக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் போட்டி போட்டு காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாருக்கு, காங்கிரஸ் மேலிடம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதோடு, எம்எல்ஏக்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 2023 ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக சித்தராமையா முதல்வராக பதவி வகித்து வந்தார். கடந்த மே மாதம் 28ம் தேதி சித்தராமையா கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
கர்நாடகாவை எடுத்து கொண்டால் முதல்வர் டிகே சிவக்குமார் + 33 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். தற்போது 14 பேர் மட்டுமே அமைச்சரவையில் உள்ளனர். இதனால் 20 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே தான் அமைச்சர் பதவியை எட்டிப்பிடிக்க எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களின் வழியாக அவர்கள் அமைச்சர் பதவியை பிடிக்க துடித்து வருகின்றனர்.
மேலும் இன்னும் சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இதற்கிடையே தான் காங்கிரஸ் மேலிடம் முக்கிய அறிவுரையை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு வழங்கி உள்ளது. அதன்படி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இப்படி அழுத்தம் கொடுப்பவர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உரிய நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பை மேலிடம் வெளியிடும்.
எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் அமைச்சர் பதவிக்காக தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதையும் மீறி யாராவது அமைச்சர் பதவிக்காக அழுத்தம் கொடுத்தால் அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று வார்னிங் செய்ய வேண்டும்.
அமைச்சர் பதவிக்காக ஆசைப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் லாபியை மேலிடம் விரும்பாத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலிட தலைவர் ஒருவர் நேரடியாக டிகே சிவக்குமாரை தொடர்பு கொண்டு இந்த மெசேஜை கூறியுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் எம்எல்சி சலீம் அகமதுவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கூறி இஸ்லாமிய மத தலைவர்கள் டிகே சிவக்குமாரை சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் மேலிடம் உரிய நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிடும். மேலிடம் யாரை தேர்வு செய்கிறதோ அதனை நான் அப்படியே பின்பற்றுவேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications