11 கர்நாடக எம்எல்ஏக்கள் மும்பை ஹோட்டலில் முகாம்.. உட்கார்ந்த இடத்திலேயே பாஜகவை தேடி வரும் ஆட்சி!
Recommended Video
பெங்களூர்: பதவியை ராஜினாமா செய்த கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 11 பேர், மும்பையிலுளள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இந்த நிலையில், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. சில தினங்கள் முன்பாக ரமேஷ் ஜாரக்கிகோலி மற்றும், ஆனந்த் சிங் ஆகிய இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைவிட அடுத்த அதிர்ச்சியாக, காங்கிரசை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் மற்றும், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 11 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விமானத்தில் மும்பை கிளம்பி சென்றுவிட்டனர். அங்கேயுள்ள சோஃபிடல் என்ற, நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
ஒரே குரல்
எல்லா எம்எல்ஏக்களுமே சொல்லி வைத்ததை போல தங்கள் தொகுதிக்கு, அரசு நல்லது செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ததாக சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். காங்கிரஸ், மஜத தலைவர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.
ஆலோசனை
அதேநேரம், சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார், இதுவரை 13 எம்எம்எல்ஏக்களின் ராஜினாமாவையும் ஏற்கவில்லை. இதுபற்றி நிருபர்கள் கேள்விகளுக்கு, கருத்து தெரிவித்த பாஜக தலைவர் எடியூரப்பா, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மற்றொரு பக்கம் ஆட்சியை காப்பாற்றுவது பற்றி, மஜத தலைவர் தேவகவுடாவை சந்தித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை பலம்
மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ்-மஜத கூட்டணியில் மொத்தம் 118 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவும் அடக்கம். பாஜகவின் பலம் 105. தற்போது 13 எம்எல்ஏக்கள் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டார், சட்டசபை மொத்த பலம் 211 என்று சரிவடையும். அப்படியானால், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 106 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது.
உச்சகட்ட பரபரப்பு
எனவே, பகுஜன் சமாஜ் உறுப்பினரை பாஜக தங்களுக்கு ஆதரவு அளிக்க இழுத்துக் கொண்டால், அக்கட்சி ஆட்சியை பிடித்துவிட முடியும். அதாவது தங்கள் எம்எல்ஏக்கள் பலத்தை அதிகரிக்காமல், உட்கார்ந்த இடத்திலேயே, பாஜகவால் ஆட்சியை பறிக்க முடியும். எனவே கர்நாடக அரசியலில் தற்போது உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.