காங்கிரஸை விட்டு பாஜகவில் இணையும் நடிகை ரம்யா? போட்டோ வெளியிட்ட எம்பி பிரதாப் சிம்ஹா! உண்மை என்ன?
மைசூர் - குடகு நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகை ரம்யாவை சந்தித்து பேசினார்.
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக மீண்டும் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் அவர் பாஜக அமைச்சர் சுதாகரை புகழ்ந்து பேசிய நிலையில் தற்போது ரம்யாவை, பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா சந்தித்து பேசியுள்ளார். மேலும் இந்த சந்திப்பு தொடர்பான போட்டோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் தான் நடிகை ரம்யா விரைவில் பாஜகவில் இணையலாம் என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் உண்மை என்ன? சந்திப்பின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
கன்னடா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரம்யா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். மண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்பியாகவும் ரம்யா இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராகவும் இவர் செயல்பட்டார். அதன்பிறகு சிறிது காலம் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருந்து வருகிறார்.

காங்கிரஸில் நடிகை ரம்யா
இருப்பினும் அவர் காங்கிரஸில் தான் நீடித்து வருகிறார். இந்நிலையில் தான் விரைவில் கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தற்போது ரம்யா தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகின்றனர். நடிகர் சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க நடிகை ரம்யா மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் பரவியது. இதுபற்றிய தகவல் அடங்குவதற்குள் நடிகை ரம்யா பாஜகவில் இணையலாம் என்ற தகவல் பரவியது. அதாவது சிக்பள்ளாப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவின் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரை அவர் புகழ்ந்து பேசினார். இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பு ரம்யா பாஜகவில் இணையலாம் என்ற தகவல்கள் பரவின.

போட்டோ வெளியிட்ட பாஜக எம்பி
இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரம்யா பாஜகவில் இணைகிறாரா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி விட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா தான். மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதி எம்பியா பிரதாப் சிம்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ரம்யாவுடன் சேர்ந்து எடுத்து போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், நான் அதிகம் விரும்பும் நடிகை ரம்யாவுடன் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ தான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.

பாஜகவில் இணையலாம் என சந்தேகம்
இந்த போட்டோவை பார்த்த சிலர் விரைவில் ரம்யா பாஜகவில் இணையலாம் என சந்தேகம் தெரிவித்தனர். மேலும் ஒரு நெட்டிசன் பிரதாப் சிம்ஹா எம்பியிடம் ‛‛நீங்கள் ரம்யாவை பலமுறை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்துள்ளீர்கள். இதனால் உங்களின் கேப்ஷனை ஒருமுறை பரிசோதித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்களும் மற்ற அரசியல்வாதிகள் மாதிரி தான் செயல்படுகிறீர்கள்'' என தெரிவித்து இருந்தார். இதற்கு பிரதாப் சிம்ஹா ‛‛அரசியல் ரீதியாக நான் இன்றும் கூட ரம்யாவை விமர்சனம் செய்தேவன். ஆனால் அவரது நடிப்பு எனக்கு அதிகமாக பிடிக்கும். அரசியல் வேறு, கலை வேறு. இதனை நாம் பிரித்து பார்க்க வேண்டும்'' என பதிலளித்தார். இதன்மூலம் இது சாதாரணமான சந்திப்பு தான் என்பது உறுதியானது.

சந்திப்பு எப்போது நடந்தது?
மேலும் நடிகை ரம்யா- பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா சந்திப்பு எப்போது? எங்கு நடந்தது? இது அரசியல் சார்ந்த சந்திப்பா? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கும் தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி தனது மகளின் பிறந்தநாளை பெங்களூரில் கொண்டாடினார். இதில் நடிகை ரம்யா, பிரதாப் சிம்ஹா ஆகியோர் பங்கேற்றதும், பிரதாப் சிம்ஹா, ரம்யாவுடன் சேர்ந்து போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டது தெரியவந்து. மேலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக நடைபெறவில்லை. எதார்த்தமாக நடந்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications