கர்நாடகா பரபரப்பு- சிஎம் சித்தராமையா ராஜினாமா? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டத்துக்கு அழைப்பு!
பெங்களூர்: "மூடா" முறைகேடு வழக்கில் தமக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்த நிலையில் முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்கிறாரா? என்கிற பரபரப்பு கர்நாடகா அரசியலில் எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோர் கர்நாடகாவில் முகாமிட்டிருப்பதும் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதும் சித்தராமையா ராஜினாமா செய்யப் போகிறாரா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளன.
மூடா என்பது கர்நாடகா மாநில அரசின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம். இந்த ஆணையமானது முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததுதான் சர்ச்சைக்குக் காரணம்.

பாஜக, ஜேடிஎஸ் போராட்டம்: முதல்வர் சித்தராமையா மனைவிக்கு சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாக பாஜக, ஜேடிஎஸ் குற்றம் சாட்டுகின்றன. இதனால் முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி பாதயாத்திரையையும் இரு கட்சிகளும் நடத்தின.
சித்தராமையா விளக்கம்: ஆனால் சித்தராமையாவோ, மனைவி பார்வதி பெயரிலான நிலத்தை மூடா தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது. இதற்கு நஷ்ட ஈடாகவே 14 வீட்டு மனைகளை மனைவிக்கு மூடா கொடுத்தது என விளக்கம் கொடுத்தார். இதனை பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் ஏற்க மறுத்தன.
சித்தராமையாவுக்கு சிக்கல்: இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் ஆபிரகாம் உள்ளிட்டோர் ஆளுநர் தாவர்செந்த் கெலாட்டை நேரில் சந்தித்து முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரினர். இது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என முதலில் சித்தராமையாவுக்கு ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் கர்நாடகா மாநில அமைச்சரவை கூட ஆளுநர் இந்த நோட்டீஸை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.
சித்தராமையாவுக்கு எதிராக ஆளுநர்: இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரலாம் என சமூக ஆர்வலர் ஆபிரகாம் உள்ளிட்டோருக்கு ஆளுநர் கெலாட் அனுமதி அளித்தார். இதனால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தாக வேண்டும் என பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. ஆனால் தாம் பதவி விலக முடியாது என மறுத்த சித்தராமையா, ஆளுநரின் அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்: இந்த நிலையில்தான் திடீரென கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, சித்தராமையா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்கின்றன.
சித்தராமையா ராஜினாமா?: அதே நேரத்தில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடி எழுந்துள்ளதாகவும் இதனால் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் துணை முதல்வர் டிகே சிவகுமார், உடனடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications