கர்நாடகா: 22 ஆண்டு தலைமறைவு- என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா உடல் தகனம்!
பெங்களூர்: கேரளாவில் தேடப்பட்டு வந்த கர்நாடகா மாநில நக்சலைட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 114 வழக்குகளில் தேடப்பட்டு வந்த விக்ரம் கவுடா, என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது சரிதான்; இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்த முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த விக்ரம் கவுடா 22 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்தார். இந்த நக்சல்பாரிகள் இயக்கம் தற்போது மாவோயிஸ்டுகள் அமைப்பாக குறிப்பிடப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகாவில் தேடப்பட்டு வந்த விக்ரம் கவுடா, கர்நாடகா மாநில நக்சல் குழுவின் தலைவராகவும் செயல்பட்டவர்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி ஹெப்ரி கப்வினாலே என்ற பதுங்கியில் விக்ரவும் கவுடா தலைமையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலில் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். 2016-ம் ஆண்டு கேரளா நீலாம்பூர் என்கவுண்ட்டரில் தப்பி ஓடியவர்தான் இந்த விக்ரம் கவுடா. நக்சல் அமைப்பின் மிக முக்கியமான தளபதிதான் இந்த விக்ரம் கவுடா.
உடுப்பி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று தகனம் செய்தனர். ஆனால் மாஜி நக்சலைட்டுகள் குழுவினரோ விக்ரம் கவுடா என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை கர்நாடகா அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. 22 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒரு நக்சலைட்தான் விக்ரம் கவுடா; அவரை சுட்டுக் கொன்றதை எந்த அடிப்படையில் விசாரிப்பது என கர்நாடகா காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். இதனிடையே விக்ரம் கவுடாவுடன் பதுங்கி இருந்து தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications