கர்நாடகாவை அலறவிடும் "போலீஸ் மரணங்கள்"- சப் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூர்: கர்நாடகாவில் போலீஸ் அதிகாரிகளின் அடுத்தடுத்த மரணங்கள் புதிய அரசியல் புயலாக மையம் கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் யாதகிரியில் சப் இன்ஸ்பெக்டர் பரசுராம் டிரான்ஸ்பர் விவகாரத்தில் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் திடீரென உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திம்மே கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பது சப் இன்ஸ்பெக்டர் பரசுராம் மரணம். இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகளான பாஜக, ஜேடிஎஸ் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திம்மே கவுடா கிராமத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது சர்ச்சையாகி உள்ளது. திம்மேகவுடா, தமிழ்நாடு எல்லையான அத்திபெலே இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போதுதான் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் திம்மே கவுடா அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த சஸ்பெண்ட் முடிந்த பின்னர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
திம்மே கவுடா தற்கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில், பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை திம்மே கவுடா விசாரித்து வந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு விருப்பமே இல்லை எனவும் திம்மே கவுடா கூறியிருந்தாராம். அரசியல் தலைவர்கள் மூலம் இந்த வழக்கில் நெருக்கடி தரப்பட்டதால் அப்படி சொன்னாராம் திம்மே கவுடா. இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கின்றனர்.
காவல் நிலையங்களின் லாக்கப் மரணங்கள், என்கவுண்ட்டர்கள்தான் பொதுவாக சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருக்கும். கர்நாடகாவில் போலீஸ் அதிகாரிகளின் மரணங்களே அடுத்தடுத்த சர்ச்சைக்குரிய பேசுபொருளாகிவிட்டது. இந்த தற்கொலை இனி எப்படிப்பட்ட புயலை கர்நாடகாவில் உருவாக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications