அதேஇடம்! பாட்டி இந்திராவுக்கு மறுவாழ்வு தந்த சிக்மகளூரில் ராகுலை நினைத்து உருகிய பிரியங்கா-என்னாச்சு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி சிக்கமகளூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். சிக்கமகளூர் என்பது அவரது பாட்டி இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு அளித்த தொகுதி என்பதால் அங்கு பாட்டி மற்றும் அண்ணன் ராகுல் காந்தியை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி உருக்கமாக பேசியது காங்கிரஸ் கட்சியினரை கலங்கவைத்தது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி நேற்று கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்டார். சிக்கமகளூரில் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார். இந்த சிக்கமகளூர் தொகுதி என்பது பிரியங்கா காந்தியின் பாட்டியான இந்திரா காந்திக்கு மறுவாழ்வு கொடுத்த தொகுதியாகும்.
அதாவது எமர்ஜென்சியை அறிவித்தந நிலையில் இந்திரா காந்திக்கு மக்கள் மீது கோபம் ஏற்பட்டது. இதையடுத்து எமர்ஜென்சிக்கு பிறகு 1977ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்த பிரதேசம் ரேபரேலியில் போட்டியிட்டு இந்திரா காந்தி தோற்றார். ரேபரேலி என்பது நேரு குடும்பத்தின் கோட்டையாக இருந்த நிலையில் அங்கேயே இந்திரா காந்தி ஜனதா கட்சியின் ராஜ்நாராயணிடம் தோற்றார். அவரது மகன் சஞ்சய் காந்தியும் உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைந்தது. இதனால் இந்திரா காந்தியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இதையடுத்து 1978 ல் கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் அரசியலில் மறுவாழ்வு பெற்றார். இதையடுத்து கடந்த 1980ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமரானார். இத்தகைய வரலாறு கொண்ட சிக்கமகளூரில் தான் நேற்று பேத்தி பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிக்கமகளூர் என்பது என் பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு அளித்த தொகுதியாகும். இங்குள்ள ரம்பாபுரி மற்றும் சாரதாம்மன் கோவில்களுக்கு எனது தந்தை ராஜீவ்காந்தி வந்து சென்றுள்ளார். எனது அண்ணன் ராகுல்காந்தியும் இங்கு வந்துள்ளார். எனது பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த மண்ணில் என்னுடைய அண்ணன் ராகுல்காந்திக்கும் நல்லது நடக்க வேண்டும்.
1978ல் பாட்டி இந்திரா காந்தி பிரசாரம் செய்தபோது மழை பெய்தது. இப்போது நான் பேசும்போதும் மழை பெய்கிறது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இந்த மண்ணை மறக்காமல் இருக்கிறோம். அன்று இந்திரா காந்தி பேசிய அதே இடத்தில் மேடை அமைத்து, மழை பெய்யும் சூழ்நிலையில் உங்கள் முன் நின்று நான் பேசுகிறேன். இது எனக்கு ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். நான் பேசும்போது மழை வருகிறது. இது கடவுளின் ஆசீர்வாதம்.

முன்பு என் பாட்டி இந்திரா காந்தியை நாடாளுமன்றத்தை விட்டு துரத்தினர். அவரது பதவி ரத்து செய்யப்பட்டது. எனது அண்ணனுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 2 பேரின் மீதும் பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எங்கள் குடும்பம் தற்போது பிரச்சனையில் தடுமாறுகிறது. அதேபோல் உங்களின் குடும்பமும் பிரச்சனையில் உள்ளது. இதனால் மீண்டும் எனது அண்ணனும், நீங்களும் வெற்றி பெற வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்'' என உருக்கமாக கூறி தொண்டர்களை கலங்க வைத்தார்.
மேலும் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார். கர்நாடகாவில் பாஜக அரசு மக்களுக்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை. 40 சதவீத கமிஷன் பெற்று பாஜக அரசு செயல்படுகிறது. இந்த அரசை அகற்ற வேண்டும் என மக்கள் மத்தியில் பிரியங்கா காந்தி எடுத்துரைத்தார்.












Click it and Unblock the Notifications