வர முடியாது.. மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும்.. கர்நாடக சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம்
பெங்களூரு:இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், மேலும் 4 வாரம் அவகாசம் கோரி, அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததில் இருந்து ஆரம்பித்த அரசியல் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

மேலும், அமைச்சர்களாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியும் சட்டசபைக்கு அழைத்து வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பினார்.
அதில், இன்று காலை 11 மணிக்கு தனது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். கொறடாக்களின் உத்தரவை மீறியதால் ஏன் உங்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என கேட்டுள்ள சபாநாயகர், இதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள், *நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வாரங்கள் அவகாசம் தேவை என கூறியுள்ளனர். இதனால், சிக்கல் நீடித்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், தீர்ப்பை பொறுத்தே அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications