எஸ்எஸ்எல்சியில் இனி 33 மதிப்பெண் எடுத்தாலே பாஸ்! மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க கர்நாடகாவில் அமல்
பெங்களூர்: கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ‛பாஸ்' மார்க் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடத்தில் 30 மதிப்பெண்ணும், மொத்தமாக 33 சதவீத மதிப்பெண்ணும் எடுத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். கர்நாடகாவை பொறுத்தவரை தமிழகத்தை போல் எஸ்எஸ்எல்சி தேர்வில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்ற நிலை அமலில் இருந்தது.

தற்போது அந்த தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை கர்நாடகா பள்ளி தேர்ச்சி மற்றுமு் மதிப்பீட்டு வாரியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, எஸ்எஸ்எல்சியில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்ணுக்கு பதில் 30 மதிப்பெண் எடுத்தால் போதும். அதேவேளையில், Internal - External-யை சேர்த்தால் 33 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பாடபத்தில் சராசரியாக 33 மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்த மதிப்பெண்ணை எடுத்து கொண்டால் 625க்கு 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்தில் 35 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. ஆனால் மொத்த சராசரிக்கு என்ற கணக்கீடும் இல்லாமல் இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேஏஎம்எஸ் எனும் கர்நாடக ஆங்கில வழிப் பள்ளிகளின் சங்க நிர்வாகங்கள் பொதுச் செயலாளர் சசி குமார், "இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. எஸ்எஸ்எல்சி தேர்வு மதிப்பீட்டில் இத்தகைய சீர்திருத்தங்கள் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடி மாணவர்களுக்கு உதவும். அதே நேரத்தில், மற்ற வாரியங்களுடன் சமமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, எஸ்எஸ்எல்சியில் முதல் மொழிக்கான மதிப்பீட்டு மதிப்பெண்களை 125 ல் இருந்து 100 ஆகக் குறைப்பதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்'' என்று கூறினார்.
கர்நாடகாவில் கடந்த 2022-23ம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதம் 83 சதவீதமாக இருந்தது. கடந்த 2023 -24ம் ஆண்டில் வெப் காஸ்டிங் முறையில் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க இந்த முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் தேர்ச்சி சதவீதம் சரிந்தது. மொத்தம் 54 சதவீதம் பேர் தான் தேர்ச்சியடைந்தனர். அதன்பிறகு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சி சதவீதம் 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
கருணை மதிப்பெண்கள் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பாவை, முதல்வர் சித்தராமையாக கண்டித்தார். இந்நிலையில் தான் தற்போது தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் ‛பாஸ்' மதிப்பெண் 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications