நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகா சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த சர்வே இன்றுடன் முடிவடைந்திருக்க வேண்டும். இருப்பினும், சில காரணங்களால் சர்வே முடிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சர்வே நடத்தி முடிக்கக் கூடுதலாக 10 நாட்கள் காலவகாசம் அளித்து உத்தரவிட்ட அம்மாநில முதல்வர் சித்தராமையா, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்தும் உத்தரவிட்டார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சாதி வாரி சர்வே நடத்தப்படுகிறது. ராகுல் காந்தி தொடர்ச்சியாகச் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் சாதி வாரி சர்வே நடந்து வருகிறது. இதற்கிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

10 நாட்கள் விடுமுறை
அதாவது அக்டோபர் 8 முதல் அக்டோபர் 18 வரை 10 நாட்கள் கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். சாதி கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அதை முழுமையாக முடிக்க உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கெடுப்பை முதலில் இன்று செவ்வாய்க்கிழமை முடிக்கத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், பல மாவட்டங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. திட்டமிட்ட அளவுக்குப் பணிகள் முடிக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டே சர்வே முடிப்பதற்கான காலக்கெடுவை 10 நாட்கள் நீடித்து கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சித்தராமையா
பெங்களூரில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இன்று அக்டோபர் 7ஆம் தேதி சர்வே பணிகளை முடிக்கத் திட்டமிட்டோம். ஆனால் சில மாவட்டங்களில் மட்டுமே கணக்கெடுப்பு முடியும் நிலையில் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பின்தங்கியுள்ளது. உதாரணமாக, கொப்பல் மாவட்டத்தில் 97 சதவீத கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. மறுபுறம் உடுப்பி மற்றும் தட்சிண கன்னட மாவட்டங்களில் முறையே 63 மற்றும் 60 சதவீதப் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. நாங்கள் எதிர்பார்த்தபடி மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு முடிவடையவில்லை" என்றார்.
10 நாட்கள் நீடிப்பு
இதன் காரணமாகவே சர்வே நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 10 நாட்கள் நீடிப்பதாக கர்நாடகா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சர்வேயில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குக் கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18 வரை எட்டு வேலை நாட்களை மட்டுமே இருப்பதாகத் தெரிவித்த சித்தராமையா, அரையாண்டு தேர்வுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த கணக்கெடுப்புப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இழப்பீடு
கணக்கெடுப்புப் பணியின் போது உயிரிழந்த மூன்று ஊழியர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். மேலும், இந்த சர்வேயில் பங்கேற்கத் தவறும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா எச்சரித்தார். இந்த சர்வேயில் 1.2 லட்சம் ஆசிரியர்கள், 40,000 பிற பணியாளர்கள் என மொத்தம் மொத்தம் 1.6 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications