கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் கூட்டு பலாத்காரம்! திக்திக்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 27 வயதான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட இரண்டு பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொதுவாக நமது நாட்டில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிறப்பாகவே உபசரிக்கப்படுவார்கள். ஆனால், சில நேரங்களில் சிலர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பார்கள். அவர்களிடம் ஈஸியாக பணம் வாங்கலாம் என்பதாலேயே இதுபோல அத்துமீறிய செயல்களைச் செய்வார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

கூட்டு பாலத்காரம்
கர்நாடகாவைச் சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் உட்பட இரு பெண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. இரவில் சுற்றிப் பார்க்க வெளியே சென்ற 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் என இரண்டு பெண்களை அந்த பகுதியில் சுற்றிய மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.. இரவு 11:30 மணியளவில் கொப்பலில் உள்ள ஒரு கால்வாய் அருகே சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த போது அந்த இரு பெண்களுடன் மேலும் 3 ஆண் சுற்றுலாப் பயணிகளும் இருந்துள்ளனர். இருப்பினும், அவர்களைக் கால்வாயில் தள்ளிவிட்டு, பெண்களைப் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல். மற்ற இருவரும் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
என்ன நடந்தது
இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர் புகார் அளித்துள்ளார். 29 வயதான அந்த பெண் தனது புகாரில், தானும் நான்கு விருந்தினர்களும் அன்று இரவு இரவு உணவு சாப்பிட்ட பிறகு துங்கபத்ரா இடது கரை கால்வாய் கரையில் நடந்து சென்று கொண்டு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்..
பலாத்காரம்
அப்போது குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரும் ஒரு பைக்கில் வந்துள்ளனர்.. அவர்கள் முதலில் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று சாதாரணமாகவே கேட்டுள்ளனர். பின்னர் சில நொடிகளில் இஸ்ரேலிய பெண்ணிடம் ரூ.100 கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர். சுற்றுப் பயணிகள் பணம் கொடுக்க மறுத்த நிலையில், இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆண் பயணிகளை கால்வாயில் தள்ளிய அவர்கள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் பைக்கில் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
போலீசார்
இது தொடர்பாக கொப்பல் காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசிட்டி கூறுகையில், "அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இது குறித்து விசாரிக்க இரண்டு சிறப்புக் குழுக்கள் அமைத்துள்ளோம். புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications