அதிரவைத்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு! கர்நாடக ஐபிஎஸ் அம்ரித் பால் கைது! சிக்கியது எப்படி?
பெங்களூர்: கர்நாடகத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகத்தில் காலியாக இருந்த 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு 2021 அக்டோபர் மாதம் தேர்வு நடந்தது. மொத்தம் 93 மையங்களில் 54 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இடி மின்னலுடன் 4 நாட்களுக்கு கனமழை..5 மாவட்ட மக்களுக்கு ரெயின் கோட் அவசியம்
இந்த தேர்வு முடிவுகள் 2022 பிப்ரவரியில் வெளியானது. இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சிஐடி விசாரணை
இந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தேர்வில் தோல்வியடைந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுபற்றி விசாரிக்க சிஐடி போலீசாருக்கு அரசு உத்தரவிட்டது.
முறைகேடு - 79 பேர் கைது
முதற்கட்ட விசாரணையில் தேர்வு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. ஓஎம்ஆர் ஷீட் மாற்றம் செய்யப்பட்டு முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு கைது நடவடிக்கைகள் துவங்கின. பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளான ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தகுமார், ஸ்ரீதர், என்ஜினீயர் மஞ்சுநாத், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், அதற்கு உதவிய போலீஸ்காரர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 79 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏடிஜிபி மீது குற்றச்சாட்டு
இந்த விவகாரத்தில் அப்போதைய ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய அம்ரித் பாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அம்ரித்பால் மறுத்து வந்தார். இதற்கிடையே அவர் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டது. 3 முறை சிஐடி போலீசார் முன்பு அம்ரித் பால் விசாரணைக்கு ஆஜரானாலும் தன்மீதான குற்றச்சாட்டு பொய் என கூறியதோடு தான் நிரபராதி என தெரிவித்து வந்தார்.
முக்கிய தகவல்
இதற்கிடையே தான் கைதான துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 25 பேரிடம் அம்ரித் பால் பேரம் பேசி ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை சாந்தகுமார் மூலம் பெற்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4வது முறையாக விசாரணைக்கு ஆஜராக அம்ரித்பாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கைது-சஸ்பெண்ட்
இதையடுத்து நேற்று சிஐடி போலீசார் முன்பு அம்ரித் பால் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் 13 நாள் காவலில் வைத்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே நேற்று இரவு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வெளிப்படையான விசாரணை
இதுபற்றி கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ‛‛ இந்த முறைகேடு மிகவும் மோசமானது. அதிர்ச்சி அளிக்கிறது. இது அவமானமானது. வழக்கு தொடர்பாக மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை வெளிப்படையாகவும், பாரபட்சமானி்றியும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் தலையீடு இல்லாமல் முடிவடைந்துள்ளது.