கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்.. அரசை காப்பாற்ற மாஸ் பிளான் செய்த காங்.-மஜத! சட்டசபையில் சித்து செம மூவ்
Recommended Video
பெங்களூர்: விப் அதிகாரம் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா இன்று சட்டசபையில் வலியுறுத்தினார். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க காங்கிரஸ்-மஜத முயற்சியில் இறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடியதுமே, முதல்வர் குமாரசாமி, தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசத் தொடங்கினார். அவர் பேசியபோது, காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா எழுந்து, இந்த விவகாரத்தில் 'பாயின்ட் ஆப் ஆர்டர்' பிரச்சினையுள்ளது என்றார்.
அவர் விப் அதிகாரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் குறுக்கிட்டு, சித்தராமையா காலதாமதம் செய்ய முயல்வதாக கோஷமிட்டனர். ஆனால் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தரப்பினர், பாஜகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கூச்சல், குழப்பம்
பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் வாக்குவாதத்தால் சட்டசபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் பலரும், முறையே, சித்தராமையாவின் பாயின்ட் ஆப் ஆர்டர் பிரச்சினைக்கு ஆதரவாகவும், எதிராகவும் உரையாற்றினர். இப்படியே மதியம் 1.30 மணிவரை பேசிக் கொண்டிருந்தனர்.

சித்தராமையா பேச்சு
இதன்பிறகு சித்தராமையா தனது உரையை தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வித்தியாசமாக உள்ளது. அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணையின்படி, தங்கள் உறுப்பினர்களுக்கு விப் உத்தரவு வழங்க கட்சி தலைமைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவில், கட்டாயப்படுத்தி அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபை செல்ல, வலியுறுத்தக் கூடாது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விப் கொடுத்தாலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபை வர மாட்டார்கள்.
|
ஆட்சிக்கு ஆபத்து
அதிருப்தி எம்எல்ஏக்கள் வராவிட்டால், கூட்டணி ஆட்சிக்கு பெரும் பிரச்சினையாகும். எனக்கு விப் பிறப்பிக்க உத்தரவு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். விப் அதிகாரம் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். விப் அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதா என்பதில் சில சந்தேகம் உள்ளது.

அரசியல் சாசனம்
எனவே, உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வெளியாகட்டும். அதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் விப் பற்றிய உத்தரவுக்கு விளக்கம் கேட்க வேண்டும். அதுவரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு விஷயத்தை கையில் எடுக்க கூடாது. அரசியல் சாசனப்படி பார்த்தால், இப்படி ஒரு சிக்கல் இருக்கும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது சரியில்லை. இவ்வாறு சித்தராமையா பேசினார். இதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிக்க, விப் தொடர்பான அதிகார பிரச்சினையை, காங்கிரஸ்-மஜத கையில் எடுத்துள்ளது உறுதியாகிவிட்டது.

சபாநாயகர் ஆலோசனை
இதனிடையே உணவு இடைவேளைக்காக சட்டசபை பிற்பகல் 1.45 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 3 மணிக்கு அவை கூட உள்ளது. அதற்குள், கர்நாடக அட்வகேட் ஜெனரலுடன் இந்த விவகாரம் பற்றி ஆலோசிக்கப்போவதாக, சபாநாயகர் ரமேஷ்குமார், சட்டசபையில் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications