கர்நாடகாவில் பரபரப்பு.. தப்பி ஓடிய பிரஜ்வல் தாயார் பவானியை வலை வீசி தேடும் சிறப்பு புலனாய்வு குழு!
பெங்களூர்: 3000 ஆபாச வீடியோக்களில் சிக்கிய கர்நாடகா ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்குகளில் தப்பி ஓடிய அவரது தாயார் பவானி ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் வலை வீசி தேடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு. இது தொடபாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் இருக்கிறார். வெளிநாட்டில் 1 மாதத்துக்கும் மேலாக பதுங்கி இருந்த பிரஜ்வல் பெங்களூர் திரும்பிய உடன் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கில் பிரஜ்வலின் தாயார் பவானி ரேவண்ணா வலை வீசி தேடப்பட்டு வருகிறார். பிரஜ்வல் வழக்கில் கடந்த ஒரு மாதமாக பல முறை பவானிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு ஒரு முறை கூட பவானி பதிலளிக்கவும் இல்லை; விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை.
இதனையடுத்து இன்று பெங்களூர், மைசூர், மண்டியா உள்ளிட்ட பல இடங்களில் பவானியின் வீடு உட்பட பல இடங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பவானி ரேவண்ணா எங்கே பதுங்கி இருக்கிறார் என்பது தெரியாமல் இந்த தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானி ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் தீவிரமாக தேடி வருவது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications