"ஐயோ.. நெஞ்சே பதறுதே.." 10 வயசு சின்ன பையன்.. பள்ளியில் மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற டீச்சர்!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 10 வயது சிறுவனை ஆசிரியர் மாடியில் இருந்து வீசி கொன்றுள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுவாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அதாவது தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே ஆசிரியர்கள் எப்போதும் பார்க்கப்பட்டார்கள். சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு எப்போதும் ஆசிரியர்களுக்கே உள்ளது.
ஆனால், துரதிருஷ்டவசமாக அனைத்து ஆசிரியர்களும் அப்படியிருப்பதில்லை. சிலர் செய்யும் மோசமான காரியம் பதற வைக்கும் வகையில் உள்ளது. அப்படித்தான் கர்நாடகாவில் ஆசிரியர் செய்த பகீர் செயல் அப்பகுதி மக்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டது.

கர்நாடக ஆசிரியர்
கர்நாடகாவின் வடக்கே உள்ள ஹக்லி கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்கு அரசுப் பள்ளியில் முதல் மாடி பால்கனியில் வைத்து ஆசிரியர் ஒருவர் 10 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், அங்கிருந்து சிறுவனைத் தள்ளியதில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மாணவரை இப்படி கொடூரமாகக் கொலை செய்தது ஆசிரியர் முத்தப்பா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவர் பரத் அந்தப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கொடூர கொலை
இதில் கொடுமை என்னவென்றால், ஆசிரியர் முத்தப்பா சிறுவனை இரும்பு ராடை போன்ற ஒரு ஆயுதத்தில் அடித்ததாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து கடக் மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி சிவபிரகாஷ் தேவராஜு கூறுகையில், "இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளோம். விசாரணையை இப்போது தான் தொடங்கியுள்ளோம். அந்த நபர் சிறுவனை எதற்காக இப்படி கொடூரமாகத் தாக்கியுள்ளார் என இப்போது தெரியவில்லை... முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது" என்றார்.

தாய் மீதும் தாக்குதல்
கொலை செய்யப்பட்ட மாணவர் பரத்தின் தாயார் கீதா பார்கர் என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்.. தனது மகனை முத்தப்பா கொடூரமாகத் தாக்குவதைப் பார்த்ததும் பதறிய கீதா, மகனைக் காக்க முயன்றுள்ளார். இருப்பினும், முத்தப்பா கீதாவையும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கீதா பார்கர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவர் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தலைமறைவு
இருப்பினும் அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முத்தப்பா அந்த பள்ளியில் நிரந்தர ஆசிரியர் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாராம். பரத்தை மேலே இருந்த தள்ளி கொலை செய்த பின்னர், முத்தப்பா தலைமறைவாகிவிட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் எங்கு மறைந்திருந்தாலும் நிச்சயம் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

டெல்லி சம்பவம்
முன்னதாக கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சம்பவம் டெல்லி பள்ளியிலும் நடந்தது. ஆத்திரத்தில் ஆசிரியை ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கத்தரிக்கோல் கொண்டு தாக்கியுள்ளார்.. சிறுமியின் மூடியை வெட்டிய அந்த ஆசிரியை, அரசுப் பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசினார். அவரை சக ஆசிரியை தடுக்க முயன்ற போதும் அது முடியவில்லை. கொடூரமாக அந்த சிறுமியைத் தாக்கி கீழே வீசினார்.

படுகாயம்
இதில் அந்த மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மாணவி உயிர் பிழைத்தார். கோபத்தின் உச்சியில் ஆசிரியர்கள் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆசிரியர்களுக்கு முறையான கவுன்சிலிங் தர வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications