கொரோனா பாதிப்பை குறைத்து காண்பித்ததா கர்நாடகா?.. திடுக்கிட வைக்கும் அமெரிக்க ஆய்வு
பெங்களூரு: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் டியூக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கேரளாவிலும், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் வீரியமாக உள்ளன. இவ்விரண்டு மாநிலங்களைத் தவிர்த்து இதர பகுதிகளில் பாதிப்புகள் கணிசமாக குறைந்துவிட்டது.
கர்நாடக மாநிலத்தில் நேற்று புதிதாக 430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,44,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 12,251 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 340 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 9,25,829 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.
31 மில்லியன்
அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் ஜோர்னலில் கடந்த பிப்.4ம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதிபடி கர்நாடகாவில் 31 மில்லியன் மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே நாள் மாநில அரசு வெளியிட்ட பாதிப்பு குறித்த அறிக்கையில் 3.3 லட்சம் பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறம், கிராமப்புறம்
டியூக் ஆய்வாளர்கள் Consumer Pyramids Household Survey (CPHS) அமைப்புடன் இணைந்து, மாநிலத்தின் ஐந்து முக்கியப் பகுதிகளின் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இந்த ஆய்வை நடத்தினர். ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 29 வரை நடத்தப்பட்ட ஆய்வில், வைரஸ் தொற்று குறித்து சோதனை செய்தவர்கள், முன்பு பாதிக்கப்பட்டு தங்கள் எதிர்ப்பு சக்தி நிலை குறித்து சோதனை செய்தவர்கள் என அனைவரிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர்கள் சேகரித்த 1,197 ரத்த மாதிரிகள் மற்றும் 1,341 ஸ்வாப் மாதிரிகளை கொண்டு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.
1:10 விகிதாச்சாரம்
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய கர்நாடகாவின் கோவிட் -19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினரும், மருத்துவருமான கிரிதர பாபு, 'ஒவ்வொருவரிலும் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. அதில் 10 கண்டறியப்படாத தொற்றுகள் இருக்கலாம். அப்படியெனில், case to infection ratio.. அதாவது, பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிப்பை ஏற்படுத்திய நபர் என்ற விகிதாச்சாரம், கோவிட் சோதனை மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் 1:10 என்று இருக்கலாம்.
அனைவருக்கும் கொரோனா
சில மாவட்டங்களில் இந்த விகிதம் 1:100 என்று இருக்கலாம். எனினும் இதன் சராசரி விகிதம் 1:40 ஆகும். எனவே, நோய்த்தொற்றுகளை பாதிப்புகளாக கணக்கிடுவது என்பது தவறான வகைப்படுத்தல் ஆகும். நாங்கள் எல்லோரையும் சோதித்திருந்தால், பாதிக்கப்பட்ட அனைவருக்குமே கொரோனா பாசிட்டிவ் காட்டியிருக்கும் என்றார்.
அரசு அறிக்கை
ஆய்வில் தெரிவிக்கப்பட்ட 31 மில்லியன் பாதிப்புகள் என்பதன் அர்த்தம் 3 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். இதைத் தான் ஆகஸ்ட் 2020ல் அரசு அறிவிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
27.3 சதவிகிதம்
செப்.16 2020ல் மாநில அரசு எடுத்த கணக்கின் படி, கர்நாடகாவின் 7 கோடி மக்களில், கிட்டத்தட்ட 1.9 கோடி (27.3%) பேருக்கு, கொரோனா தொற்று இருந்தது அல்லது அதற்கு முன்பாக அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.