கர்நாடகா: அத்வானி கதிதான்- எடியூரப்பா அரசியலுக்கு முடிவுரை? பிரதமர் மோடி நிகழ்ச்சியில் புறக்கணிப்பு!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் பாஜக முகமாக இருந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை உருவாக்கிய அத்வானி உள்ளிட்ட சீனியர்கள் ஓரம்கட்டப்பட்ட பாணியில் எடியூரப்பாவின் அரசியல் அத்தியாயத்துக்கு பாஜகவே முடிவுரை எழுத தொடங்கிவிட்டதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி என்றாலே வாஜ்பாயும் அத்வானியும்தான் கண்முன்னே நிழலாடுவார்கள். பாஜக எனும் இன்றைய அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி. நாட்டின் பிரதமராக வாஜ்பாய், துணை பிரதமராக அத்வானி பதவி வகித்தனர். வாஜ்பாய் காலமாகிவிட, அத்வானி இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு உள்ளது.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் வரை பாஜகவின் பிரதான முகமாக அத்வானி இருந்து வந்தார். லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போதும் கூட அத்வானியின் ரோல் என்ன என்பது குறித்து ஊடகங்கள் வரிந்து வரிந்து எழுதின. ஆனால் பாஜகவின் முதியோர் இல்லம் போல ஒரு கமிட்டியை உருவாக்கி அத்வானி உள்ளிட்ட சீனியர்கள் பலரும் அதில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் அத்வானி எனும் பாஜகவின் நிறுவனத் தலைவரின் அரசியல் அத்தியாயத்தை அவர் உருவாக்கிய பாஜகவே முடித்து வைத்துவிட்டது.
அத்வானிக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே நிலைமைதான் இப்போது தென்னிந்தியாவின் பாஜக முகமாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் நிகழ்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கக் கூடிய ஒரே மாநிலம் கர்நாடகா. தென்னிந்தியாவில் இம்மாநிலத்தில் மட்டுமே பாஜக வலிமையாக இருக்கிறது. இதற்கு எடியூரப்பாவின் பங்களிப்பு பிரதான காரணம். எடியூரப்பா தாம் சார்ந்த லிங்காயத்துகளை பாஜகவின் வாக்கு வங்கியாகவே உருவாக்கி வைத்திருந்தார். இதனால் பாஜகவால் ஆட்சி அதிகாரத்தை சுவைக்க முடிந்தது. எடியூரப்பா, பாஜகவுடன் மோதலில் இறங்கி தனிக்கட்சி தொடங்கி பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்தும் இருக்கிறார்.
கர்நாடகாவில் குமாரசாமியின் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு மீண்டும் எடியூரப்பா முதல்வரானதே பல்வேறு தடைகளைத் தாண்டிதான். அப்போதே எடியூரப்பாவின் வயதை சுட்டிக்காட்டி அவரும் அத்வானி போல ஓரம்கட்டப்படுவார் என கூறப்பட்டது. ஆனாலும் 2 ஆண்டுகாலம் முதல்வர் நாற்காலியை கொடுத்துவிட்டு பின்னர் அவரை பதவி இறக்கிவிட்டது பாஜக. இதன்பின்னரும் எடியூரப்பாவுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் தரப்படாமல்தான் இருந்தது. இந்த நிலையில் திடீரென பாஜகவின் ஆட்சி மன்ற குழுவில் எடியூரப்பா இடம் பெற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் லிங்காயத் வாக்குகளை அறுவடை செய்யவே எடியூரப்பாவை அரவணைத்துக் கொண்டிருக்கிறது பாஜக எனவும் கூறப்பட்டது.
இப்போது கர்நாடகா அரசியலில் எடியூரப்பா மீண்டும் பேசுபொருளாகிவிட்டார். பிரதமர் மோடி, கர்நாடகாவில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தருகிறார் என்ற தகவலைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களையும் தயார்படுத்தி வைத்தார் எடியூரப்பா. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல்நாள் வரை எடியூரப்பா, பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவே இல்லை. பிரதமர் மோடியும் வந்தார்.. சென்றார்... யாரும் எடியூரப்பா பற்றி கவலைப்படவும் இல்லை.
இந்த சர்ச்சை வெடித்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்றது அரசு நிகழ்ச்சி. ஆகையால் விதிமுறைகளின்படி எடியூரப்பா அழைக்கப்படவில்லை என சாக்கு போக்கு சொல்லப்பட்டது. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, கர்நாடகா சட்டசபை தேர்தலில் லிங்காயத்துகளின் வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு கிடைக்க சாத்தியம் இல்லை என்பதையே உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் எடியூரப்பாவின் தயவு பாஜகவுக்கு தேவை இல்லாத நிலைமைதான் உருவாகி வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் எடியூரப்பாவை ஓரம் கட்டுகிற படலம் தொடங்கிவிட்டது என்கின்றனர். அந்தோ பரிதாபம்!












Click it and Unblock the Notifications