சிக்மகளூர் மலையில் மாயமான கேரளா சிறுமி! 2000 அடி பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்பு! என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சந்திரட்ரோணா மலைத்தொடரில், கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தனா (16) காணாமல் போன நிலையில் 3 நாட்கள் கழித்து தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரளாவிலிருந்து பெற்றோருடன் சுமார் 40 பேர் கொண்ட சுற்றுலா குழுவில் ஸ்ரீநந்தனா சிக்மகளூர் வந்திருந்தார். செவ்வாய்க்கிழமை மாலை இந்த குழுவினர் சந்திரட்ரோணா மலைப்பகுதியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மணியக்கதாரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் மற்ற இரண்டு குழந்தைகளுடன் சிறுமி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். பின்னர், மாலை 6.30 மணியளவில் இருட்டத் தொடங்கிய வேளையில், எதிர்பாராதவிதமாக ஸ்ரீநந்தனா குழுவை விட்டுப் பிரிந்து மாயமானார்.
பெற்றோரும் குழுவினரும் தேடியும் அவர் கிடைக்காததால், பதற்றமடைந்த அவர்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும் வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் அடங்கிய 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்கினர். நள்ளிரவு வரை டார்ச் விளக்குகளின் உதவியுடன் தேடுதல் நீடித்தது.
இருப்பினும் அடர்ந்த பனிமூட்டம், கரடுமுரடான நிலப்பரப்பு, குறைவான வெளிச்சம் ஆகிய காரணங்களால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு, நள்ளிரவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
புதன்கிழமை அதிகாலையிலேயே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேடுதல் பணியை மீண்டும் தொடங்கினர். மனிதர்களால் செல்ல முடியாத செங்குத்தான மற்றும் கடினமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் தேடுவதற்கு அதிநவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
"மாணவியைப் பாதுகாப்பாக மீட்பதே எங்களின் தற்போதைய முதன்மை நோக்கம்" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி கடைசியாக இருந்த இடத்தில் இருந்து 2000 அடி பள்ளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் கண்ணீர் விடும் காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, குடகு மாவட்டத்தின் தாடியான்தாமோள் மலைப்பகுதியில் மலையேற்றம் சென்ற கேரளாவைச் சேர்ந்த சரண்யா ஜி.எஸ். (36) என்ற பெண் காணாமல் போனார். மூன்று நாட்கள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
சரண்யா மீட்கப்பட்ட பிறகு, இந்தச் சம்பவத்தில் உள்ளூர் பாஜகவினர் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாபோக்லு காவல்துறையிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சரண்யா காணாமல் போன விதம் மற்றும் அவர் மீட்கப்பட்ட போது இருந்த நிலை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது அரசு நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நடத்தப்பட்ட 'திட்டமிட்ட நாடகமா?' என விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
ஒருவேளை விசாரணைக்குப் பிறகு இது பொய்யான புகார் என்று தெரியவந்தால், தேடுதல் பணிக்காக அரசு செலவிட்ட தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications