காரில் ஏறும்போது காங். தலைவர் பற்றி வாயை விட்டு மாட்டிக்கொண்ட குமாரசாமி.. காங்கிரஸிடம் மன்னிப்பு!
பெங்களூர் : கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமி, காங்கிரஸ் கட்சியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமாரை திட்டிய வீடியோ வைரலாக பரவியதையடுத்து, காங்கிரஸ் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எனது இயல்பு அல்ல, பள்ளிக் குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்திருந்ததால் கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டேன் எனக்கூறி தனது வார்த்தைக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் குமாரசாமி.
ஐஏஎஸ் ஆபீசர்களாக RSS கும்பல்.. 'நாட்டை பிடித்த ஆக்டோபஸ்' பகீர் கிளப்பிய குமாரசாமி.. ஆமோதித்த திருமா!
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாரின் தொகுதியான ஸ்ரீனிவாஸ்பூர் சட்டமன்றத் தொகுதியில் பார்வையிட்டுவிட்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி காரில் ஏறும்போது, தனது கட்சித் தொண்டர் ஒருவருடன் பேசுகையில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாரை கடுமையான வார்த்தையைச் சொல்லிக் குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.
வெறுப்பு அரசியல் வேண்டாம்
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து குமாரசாமியை டேக் செய்தனர். அந்த பதிவில், "வெறுப்பின் அடிப்படையில் அரசியல் செய்யக்கூடாது, நாம் பயன்படுத்தும் வார்த்தைகள், நடத்தைகள் நமது ஆளுமையின் கண்ணாடி. உங்கள் வார்த்தைப் பிரயோகம், உங்களுக்குப் புகழைத் தராது, அரசியலின் கண்ணியத்தைக் காப்பாற்றாது. பரஸ்பர மரியாதையுடன் அரசியலைச் செய்யலாம்" எனச் சாடியது காங்கிரஸ் கட்சி.
மன்னிப்பு கேட்ட குமாரசாமி
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் குமாரசாமி. "முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரை குறிப்பிட நான் பயன்படுத்திய வார்த்தை என்னையும் புண்படுத்துகிறது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது எனது இயல்பும் அல்ல, எனது ஆளுமையும் அல்ல. எனது வார்த்தை ரமேஷ்குமாரையோ அல்லது வேறு யாரையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். எனது வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் கண்ணீர்
மேலும், தான் அதிக கோபத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் குமாரசாமி. ஸ்ரீனிவாஸ்பூர் சட்டமன்றத் தொகுதியின் பங்கவாடி கிராமத்தில் ஒரு பாழடைந்த பள்ளியைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். குழந்தைகள் மரத்தின் கீழ் அமர்ந்து பாடம் படிப்பதைக் கண்டு மிகவும் கோபமடைந்தேன். அந்த கோபத்தில் இப்படி வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். குழந்தைகளின் கண்ணீரே என் கோபத்திற்குக் காரணம். யாரையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.