"30% கமிஷன்!" மடங்களுக்கான திட்டங்களுக்கும் "கட்டிங்!" லிங்காயத்து தலைவர் பகீர் குற்றச்சாட்டு
பெங்களூர்: கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை அரசு அனைத்து வகையான திட்டங்களில் இருந்தும் 30 சதவீத கமிஷனை கேட்பதாக லிங்காயத் சமூகத் தலைவர் பரபர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கர்நாடகாவில் பெரும்பான்மை மக்கள் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அம்மாநில அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி லிங்காயத் சமூகத்தினருக்கு உண்டு.
அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் இந்நாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் கூட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

பரபர குற்றச்சாட்டு
அங்கு மாநில தேர்தலில் வெல்ல லிங்காயத் சமூகத்தினரின் ஆதரவு கட்டாயம் தேவை. இந்தச் சூழலில் கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை அரசு, மடங்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் இருந்து கூட 30 சதவீத கமிஷன் எடுப்பதாக லிங்காயத்சமூகத்தைச் சேர்ந்த தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீதான ஊழல் புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

யார் இவர்
லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படும் திங்களேஸ்வர சுவாமி இந்த பரபர குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இவர் தான் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகும் போது, 10க்கும் மேற்பட்ட லிங்காயத் தலைவர்களுடன் அவரை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தவர் ஆவர். அதேபோல எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால் கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு வீழ்ச்சி ஏற்படும் என்று எச்சரித்தவரும் இவர்தான்.

30% கமிஷன்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "கமிஷன் பற்றி எங்களுக்குத் தெரியும். மடங்களின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்காக ஏதேனும் மானியங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றால், அந்தத் தொகையில் இருந்து அரசு 30 சதவீதத்தை கமிஷனாகக் எடுத்துக் கொள்கிறது. அப்படி இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், மானியங்கள் விடுவிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்" என்று பரபர குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திங்களேஸ்வர சுவாமியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் விளக்கம்
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "அவர் அனைவரும் போற்றும் சுவாமிகள், நன்கு அறியப்பட்டவர். யாருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது, எதற்காகக் கொடுத்தனர் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கும்படி அவரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அவரது குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

குற்றச்சாட்டு
கடந்த வாரம் தான் கர்நாடகாவில் பாஜக நிர்வாகியும் ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பாட்டீல், அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாகக் குற்றஞ்சாட்டி தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு ஒப்பந்ததாரர்களும் சந்தோஷ் பாட்டீல் குற்றச்சாட்டை உண்மை என்றே கூறினர். இருப்பினும், முதல்வர் பசவராஜ் பொம்மை முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்.

பாஜக தலைமை
இருப்பினும், அங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக தலைமை அறிவுறுத்தல் படி அவர் பதவி விலகினார். இருப்பினும், ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications