கர்நாடகாவில் கருகும் தாமரை.. பாஜகவை விட அதிக இடங்களை வெல்லும் காங்கிரஸ்! சர்வேயில் தலைகீழ் மாற்றம்
பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என லோக்போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும், பாஜக வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக உள்ள சில அம்சங்களை இந்த சர்வே தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 26, மே 7 என 2 கட்டங்களாக தலா 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பாஜக, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.
அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தை போல் கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா லோக்சபா தேர்தல் தொடர்பாக Lok Poll சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 1,350 பேரை சந்தித்து நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி லோக்போல் கருத்து கணிப்பு பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கடந்த 2019ல் பாஜக தனித்து போட்டியிட்டது. 28 தொகுதிகளில் 25 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால் இந்த முறை பாஜக 11 முதல் 13 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக இப்போது ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருந்தாலும் கூட இந்த சரிவு என்பது பாஜவுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் காங்கிரஸ் கட்சியினர் இந்த கருத்து கணிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் கடந்த 2019 தேர்தலில் பெங்களூர் புறநகர் தொகுதியில் மட்டும் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் வெற்றி பெற்றார். ஆனால் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 முதல் 17 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பில் பாஜகவை விட காங்கிரஸ் எப்படி அதிக இடங்களை வெல்லும்? என்பதற்கான 5 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது காரணம் என்னவென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறிவித்த மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவச பஸ் பயணம், 10 கிலோ ரேஷன் அரிசு, 200 யூனிட் இலவச மின்சாரம், படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை நிறைவேற்றியது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது காரணம் என்பது ஒக்கலிகர் சமுதாயத்தினரின் கோபம். பாஜகவை பொறுத்தமட்டில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பெங்களூர் வடக்கு தொகுதி எம்பியாக இருந்த இவரிடம் முதலிடம் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஒக்கலிகர் சமுதாயத்தினர் பாஜகவினர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
3வது காரணம் என்னவென்றால் எதிரும், புதிருமாக இருந்த பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இதில் சிக்கபள்ளாப்பூர், கோலார், மைசூர், சித்ரதுர்கா, சாம்ராஜ்நகர், ராய்ச்சூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவினர், ஜேடிஎஸ் கட்சியினரை மதிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜேடிஎஸ் கட்சியினர் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலிக்க அதிக வாய்ப்புள்ளது.
4வது காரணம் என்ன என்று பார்த்தால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டார், எஸ்சி, எஸ்டி பிரிவினர் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளனர். 5 காரணம் என்பது தற்போது பல தொகுதிகளில் பாஜகவில் உள்கட்சி பூசல் உள்ளது. இது பாஜகவின் வெற்றியை பெரிதாக பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications