முதல்வர் சித்தராமையா மனைவிதான்.. 4 மணிநேரமாக விசாரித்த போலீஸ்.. அதுதான் லோக்-ஆயுக்தா
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம், முடா (MUDA) விவகாரம் தொடர்பாக லோக்-ஆயுக்தா போலீசார் சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
ஏன் விசாரணை?: மைசூரு தாலுகாவில் உள்ள கேசரே கிராமத்தின் சர்வே எண் 464ல் பார்வதிக்கு 3.16 ஏக்கரில் நிலம் இருக்கிறது. இதை அவரது சகோதரர் மல்லிகர்ஜுன சுவாமி கடந்த 2004ம் ஆண்டு வேறு ஒருவரிடமிருந்து வாங்கியிருக்கிறார். இந்த நிலத்தை தனது சகோதரி பார்வதிக்கு கொடுத்திருக்கிறார். இப்படி கைமாறிய நிலத்தை மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) சட்டவிரோதமாக கைப்பற்றியதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து பார்வதிக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதால்தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

முறைகேடு: பார்வதிக்கு வழங்கப்பட்ட நிலத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதிக மதிப்புள்ள நிலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளவும், சித்தராமையாவையும், அவரது மனைவியையும் இதில் இணைக்கவும் கடந்த செப்.25ம் தேதி சம்மதம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து செப்.27ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4 மணி நேரம் விசாரணை: இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பார்வதிக்கு லோக்-ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து பார்வதி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரை என சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் மனைவியிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
லோக்-ஆயுக்தா: இந்த விசாரணையை மேற்கொண்டது லோக்-ஆயுக்தா அமைப்புதான். இது சிபிஐ, வருமான வரித்துறை போன்று தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாகும். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த அமைப்புக்கு நிதி மாநில அரசுதான் கொடுக்கும். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பு: லோக்-ஆயுக்தா விசாரணைக்கு காங்கிரஸ் தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு, மத்தியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டு 2014ல் அமலான விசாரணை அமைப்பை எதிர்த்து தற்போது காங்கிரஸே போராடுவது முரணாக இருப்பதாக பாஜாக, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications