டிகே சிவக்குமார் மீது பாய்ந்த லோக்ஆயுக்தா சொத்து குவிப்பு வழக்கு! சிபிஐயிடம் காப்பாற்ற முயற்சியா?
பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்து குவித்த புகார் தொடர்பாக கர்நாடகா லோக்ஆயுக்தா போலீசார் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கிடையே சிபிஐ விசாரணையில் இருந்து டிகே சிவக்குமாரை காப்பாற்றும் வகையில் கர்நாடகா அரசு செயல்படுவதாக பரபரப்பான குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டிகே சிவக்குமார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு டிகே சிவக்குமார் தான் முக்கிய காரணமாகும்.

இதையடுத்து அவர் முதல்வர் பதவியை குறிவைத்தார். ஆனால் கட்சி மேலிடம் முதல்வர் பதவியை சித்தராமையாவுக்கு வழங்கியது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும் பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டது.
கர்நாடகாவை பொறுத்தவரை கோடீஸ்வர எம்எல்ஏ என்றால் அது டிகே சிவக்குமார் தான். அதாவது அவரது சொத்து மதிப்பு ரூ.1000 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின்படி டிகே சிவக்குமாரின் சொத்து மதிப்பு என்பது ரூ.1,214.93 கோடி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடந்த 5 ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.595 கோடி வரை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
மேலும் டிகே சிவக்குமாரின் குடும்பத்தினரிடம் 2.184 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி, ரூ.9 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச், ரூ.23.90 லட்சம் மதிப்புள்ள ஹூப்லட் வாட்ச் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதவிர வருமான வரித்துறை, லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறையினர் உள்பட மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக கர்நாடகாவில் கடந்த 2013ம் முதல் 2018 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக சித்தராமையா இருந்தார். அவரது அமைச்சரவையில் டிகே சிவக்குமார் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் டிகே சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்தை மீறி ரூ.74.94 கோடிக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. முந்தைய பாஜக ஆட்சியில் இந்த புகார் தொடர்பான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி சோதனைகள் மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தது.
இதற்கிடையே தான் டிகே சிவக்குமாரின் சொத்து குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை கர்நாடகா அரசு (காங்கிரஸ் அரசு) கடந்த ஆண்டு நவம்பர் வாபஸ் பெற்றது. மேலும் வழக்கை லோக்ஆயுக்தா காவல்துறை விசாரிக்க கர்நாடகா அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் லோக்ஆயுக்தா போலீசார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளனர். அதோடு லோக்ஆயுக்தா போலீஸ் சார்பில் வழக்கு குறித்த ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி சிபிஐ-க்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டிகே சிவக்குமாரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கான ஒப்புதலை கர்நாடகா அரசு திரும்ப பெற்றது மற்றும் வழக்கை லோக்ஆயுக்தா போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்திருப்பதை எதிர்த்து சிபிஐ சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் தான் லோக்ஆயுக்தா போலீசார் டிகே சிவக்குமாருக்கு எதிராக அதிரடியாக சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே தான் சிபிஐ என்பது மத்திய விசாரணை அமைப்பு. அந்த அமைப்பு விசாரணை நடத்தினால் டிகே சிவக்குமாருக்கு தண்டனை கிடைக்கும் என்பதால் மாநில அரசு வழக்கை கர்நாடகா லோக்ஆயுக்தா போலீசுக்கு மாற்றம் செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபற்றி டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛எனது வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடியாது என்று அப்போதைய அட்வகேட் ஜெனரல் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் நகலை நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் மூலம் பெற்று பாதுகாப்பாக வைத்துள்ளேன். மேலும் பாஜகவின் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான அரசு அட்வகேட் ஜெனரலின் கருத்தை மறுத்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. எங்கள் அரசு சிபிஐக்கு அளித்த ஒப்புதலை வாபஸ் பெற்று, கர்நாடக லோக்ஆயுக்தாவுக்கு வழக்கை அனுப்பியுள்ளது. நான் சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications