களைகட்டும் பெங்களூர் கூட்டம்-முதல்வர்கள் ஸ்டாலின், மமதா உட்பட 24 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாளை காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. பெங்களூரில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உட்பட மொத்தம் 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸையும் உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்சிகளின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. பாட்னாவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மொத்தம் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நாளையும் நாளை மறுநாளும் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் அகில இந்திய கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேற்கொண்டு வருகிறார்.
பெங்களூர் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், ஜெயந்த் சவுத்ரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பெங்களூர் ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பெங்களூர் கூட்டம் மிக முக்கியமானது. இந்தக் கூட்டத்தில் நான், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே பங்கேற்கிறோம் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு பெங்களூர் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நடக்கும் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர்களின் சங்கமம் இது. பாஜகவுக்கு எதிரான அனைத்து தோழமை சக்திகளையும் காங்கிரஸ் ஓரணியில் திரட்டுவதன் மூலம் அகில இந்திய அளவிலான காங்கிரஸின் தேவையை பகிரங்கப்படுத்துவது என்பதால் இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications