எம்எல்ஏக்களை சந்தித்த அனுமதி மறுப்பு.. பெங்களூரு ராமதா ஹோட்டல் முன் திக்விஜய் சிங் தர்ணா
பெங்களூரு: மத்திய பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயத்தில் உள்ளது. பெங்களூருவில் உள்ள 16 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தால் காங்கிரஸ் தப்பிக்கும். எனவே எம்எல்ஏக்களை சந்தித்து பேச பெங்களூரூ வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய, உள்ளே அனுமதிக்குமாறு எம்எல்ஏக்கள் தங்கி உள்ள ஓட்டல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி உயர்த்தினார்.

அத்துடன் அவர்களை பெங்களூருவில் உள்ள ராமதா ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைத்தார். அதன்பிறகு அவர் பாஜக தலைவர்களை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இதற்கிடையில் 22 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இதில் 6 அமைச்சர்களின் ராஜினாமாவைத்தான் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். மற்றவர்களின் ராஜினாமாவை ஏற்கவில்லை. தற்போதைய நிலையில் மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவின் பலம் 107 ஆகவும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 99 ஆகவும் உள்ளது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க 112 பேர் தேவை. தற்போது ராஜினாமா ஏற்கப்படாததால் அவர்கள் வந்து வாக்கெடுப்பில் கலந்து வாக்களித்தால் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
இதையடுத்து எம்எல்ஏக்களை சமாதானம் செய்வதற்காக பெங்களூரு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வரவேற்றார். அதன்பிறகு எம்எல்ஏக்கள் 16 பேரும் தங்கியுள்ள ராமதா ஓட்டலுக்கு திக்விஜய் சிங் செல்ல முயன்றார். அவரை அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.இதையடுத்து ஓட்டல் முன்பு அமர்ந்து திக் விஜய் சிங் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் தடுத்து காவலில் வைத்தனர்.அதன்பிறகு திக்விஜய் சிங்கை ஓட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.












Click it and Unblock the Notifications