கர்நாடகா தேர்தலில் புது பரபரப்பு- மகாராஷ்டிரா சரத்பவாரின் என்சிபி 45 தொகுதிகளில் களமிறங்குகிறதாம்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகளில் ஒன்றான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் 40 முதல் 45 தொகுதிகளில் சரத்பவாரின் தேசியவாத கட்சி (என்சிபி) போட்டியிட முடிவு செய்துள்ளதாம்.
மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் ஜேடிஎஸ் ஆகியவைதான் பிரதான கட்சிகள். இவைதவிர தெலுங்கானாவின் ஆளும் பிஆர்எஸ், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, தமிழ்நாட்டின் அதிமுக கட்சி உள்ளிட்டவையும் போட்டியிட உள்ளன. இந்த வரிசையில் மகாராஷ்டிராவின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான சரத்பவாரின் தேசியவாத கட்சி (என்சிபி), கர்நாடகா தேர்தலில் களம் இறங்க உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளை குறிவைத்து சந்தீரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி களமிறங்குகிறது. இதைப் போலவே கர்நாடக- மகாராஷ்டிரா எல்லைப் பகுதிகளில் மராத்தியர் வாக்குகளை இலக்கு வைத்து என்சிபி போட்டியிட முடிவு செய்துள்ளது. மொத்தம் 40 முதல் 45 தொகுதிகளில் என்சிபி போட்டியிட இருக்கிறதாம்.
கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக என்சிபி கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை மும்பையில் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் கூறுகையில், கர்நாடகா தேர்தல் தொடர்பாக நாளை ஆலோசித்து முடிவெடுக்க உள்ளோம் என்றார்.
சரத்பவாரின் என்சிபி ஏற்கனவே காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிரா கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைமையிலான மெகா எதிர்க்கட்சி கூட்டணி அமைப்பதில் சரத்பவாரும் முக்கிய பங்கு வகிப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் என்சிபி போட்டியிட்டால் காங்கிரஸ் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications