சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே ... 'கபே காபி டே' புதிய தலைவராக நியமனம்!
பெங்களூரு: 'கபே காபி டே' நிறுவனங்களின் தலைவராக மாளவிகா ஹெக்டே நியமிக்கபட்டு உள்ளார். இவர் முன்னாள் தலைவர் வி.ஜி.சித்தார்த்தாவின் மனைவி ஆவார்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா கடந்த ஆண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாளவிகா ஹெக்டே தலைமையில் காபி டே தனது பழைய புத்துணர்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கபே காபி டே' என்ற பிரபல நிறுவனத்தை கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா நடத்தி வந்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவின் கணவர் ஆவார்.நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் 'காபி டே' நிறுவங்களின் கிளை இயங்கி வந்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் குதித்து சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலில் தோல்வி அடைந்து விட்டதாகவும், எவ்வளவோ முயன்றும் நொடிந்த நிறுவனத்தை மீட்க முடியவில்லை என்றும் அவர் இறப்பதற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்து இருந்தார். எனவே தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த நிலையில் காபி டே நிறுவங்களின் புதிய தலைமை செயல் அதிகாரியாக(சிஇஓ) வி.ஜி.சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே நியமிக்கபட்டு உள்ளார்.
சித்தார்த் இறந்த பிறகு காபி டே எண்டர்பிரைசஸ் உறுப்பினர் எஸ்.வி. ரங்கநாத் இடைக்காலத் தலைவராக இருந்தார். இந்த நிலையில்தான் கணவர் இறந்து ஒரு ஆண்டுக்கு பிறகு மாளவிகா தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். மாளவிகா ஹெக்டே தலைமையில் 'காபி டே' மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் வீறு நடை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.