பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எலக்டரானிக்ஸ் சிட்டி அருகே நடுரோட்டில் வைத்து தனது மனைவியை கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தின் காரணமாக அவர் கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

பாகேபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா என்கிற கிருஷ்ணா (43). இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 15 வயதில் மகனும் 12 வயதில் மகளும் உள்ளனர்.
கிருஷ்ணப்பா கூலி வேலை செய்து வருகிறார். அது போல் சாரதாவும் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சாரதாவின் நடத்தை மீது கிருஷ்ணப்பாவுக்கு சந்தேகம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இதனால் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகிறார்களாம். கிருஷ்ணப்பாவுடன் மகனும், சாரதாவுடன் மகளும் வசித்து வந்தனர். இந்த நிலையில் சாரதாவும் அவருடைய மகளும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகே உள்ள சிக்கதோக்குரு எனும் இடத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு 8 மணிக்கு சாரதா வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு புதிய கத்திகளுடன் கிருஷ்ணப்பா காத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் சாரதாவுடன் கிருஷ்ணப்பா ஏதோ வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பா, மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரதாவின் கழுத்தில் குத்தினார். இதில் நிலைத்தடுமாறி சாரதா கீழே விழுந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே அங்கிருந்து தப்பியோட முயன்ற கிருஷ்ணப்பாவை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணப்பாவை போலீஸில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 8 மணிக்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications