உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற மங்களூர் தீவிரவாதி.. நாசவேலைக்கு சதியா? என்ஐஏ 'திடுக்' தகவல்
பெங்களூர்: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் முகமது ஷாரிக், உடுப்பியில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த கோயிலுக்கு மட்டுமல்லாமல் அதன் சார்பில் நடைபெற்ற தேரோட்டத்திலும் முகமது ஷாரிக் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் அங்கு நாச வேலையில் ஈடுபட அவர் சதித்திட்டம் தீட்டினாரா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமது ஷாரிக் தொடர்பாக தினமும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து, தமிழகம், கர்நாடகா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு மாற்றியமைப்பு.. காரணம் இதுதான்
பீதியில் ஆழ்த்திய குக்கர் குண்டுவெடிப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தமும், அந்த ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் என்ற 24 வயது இளைஞரும் படுகாயமடைந்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் முகமது ஷாரிக் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், முகமது ஷாரிக் தான் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது. கோவையில் கடந்த மாதம் கார் சிலிண்டர் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இந்த மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பியது.
திடுக்கிடும் தகவல்கள்
இது தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புள்ளதால் கர்நாடகா அரசு செய்த பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதன்பேரில், முகமது ஷாரிக்கை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முகமது ஷாரிக்கின் செல்போனை ஆய்வு செய்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கோயில்களில் தாக்குதல் சதி
அதாவது, முகமது ஷாரிக் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து பிரேம்ராஜ் என்ற பெயரிலும், அருண் குமார் என்ற பெயரிலும் தென்னிந்தியாவின் பல இடங்களில் சுற்றி வந்திருக்கிறார். குறிப்பாக, கோவை, மதுரை, கன்னியாகுமரி, கேரளாவின் கொச்சி, கோழிக்கோடு, கர்நாடகாவின் மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மங்களூரில் உள்ள 3 கோயில்கள் உட்பட 6 இடங்களில் அவர் தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து செல்கின்றனர்.
உடுப்பி கிருஷ்ணன் கோயில்
இந்நிலையில், ஷாரிக் கடந்த அக்டோபர் 11-ம் தேதி உடுப்பியில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர், கிருஷ்ணன் கோயிலின் ரத வீதியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது. ரத வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள் இதை உறுதி செய்தனர். எனவே, உடுப்பி கிருஷ்ணன் கோயிலிலும் நாசவேலையில் ஈடுபட ஷாரிக் சதி திட்டம் தீட்டினாரா என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.