கொடுத்து வச்ச புள்ளிங்கோ.. தினமும் பால்,முட்டை,சாத்துக்குடி ஜூஸ்.. அசத்தும் பெங்களூரு பல்கலைக்கழகம்!
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு தினமும் பால், முட்டை, வாழைப்பழம், ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பல்கலைக்கழகத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அங்கு பல மாதங்களுக்கு பிறகு நவம்பர் 17-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கபட்டு வருகின்றன. பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கபடுகின்றனர். நேரடியாக வர விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கற்பிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களுருவில் உள்ள பெங்களுரு பல்கலைக்கழகம், விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு தினமும் பால், முட்டை வழங்கி அசத்தி வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் ஜனதா பாரதி வளாகத்தில் உள்ள 6 விடுதியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தினமும் அவர்களுக்கு 2 முறை பால் வழங்கப்படுகிறது . மாலையில் இஞ்சி கஷாயமும் , இரவில் முட்டையும், வாழைப்பழமும் வழங்கப்படுகின்றன. மேலும், சாத்துக்குடி ஜுஸும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ஆர் .வேணுகோபால் கூறுகையில், மாணவர்களின் படிப்புடன் அவர்களின் உடல்நலனும் மிகவும் அவசியம். எனவே அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக பால், முட்டை வழங்குகிறோம் என்றார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் இந்த செயலால் அங்கு படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைத்தளத்திலும் பல்கலைக்கழகத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications