சாமி சத்தியமா சொல்லுங்க.. கர்நாடகா பாஜக எம்எல்ஏக்களிடம் சத்தியம் வாங்கும் மேலிடம்! என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த எம்எல்சிக்கள் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் கட்சி மாறி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள் யார் என தெரியவில்லை. இந்நிலையில் தான் அனைத்து பாஜக எம்எல்ஏக்களையும் கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவிலுக்கு அழைத்து சென்று கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. பாஜக வேட்பாளர்களுக்கு தான் ஓட்டளித்தேன். கட்சி மாறி ஓட்டளிக்கவில்லை என்று சத்தியம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடகா மாநில பாஜக மாநில தலைவர் பிஒய் விஜயேந்திரா (கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன்) கூறியதாவது:
''கர்நாடகா சட்ட மேலவை (எம்எல்சி) தேர்தலில் கட்சி மாறி எம்எல்ஏக்கள் வாக்களித்து இருப்பது அடிமட்ட தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கட்சியின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்கி உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்காகவே தர்மஸ்தலாவில் பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4 அல்லது 5 நாட்களில் தர்மஸ்தலாவில் பாஜக எம்எல்ஏக்களின் சிறப்பு கூட்டத்தை நடத்த நான் முடிவெடுத்துள்ளேன்.
எங்கள் எம்எல்ஏக்கள் தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரர் சுவாமிக்கு முன்பாக சத்தியம் செய்து, சட்டமேலவைத் தேர்தலில் தாங்கள் எவ்வாறு வாக்களித்தோம் என்பது குறித்த உண்மையை வெளிப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உண்மையை கண்டறிவதில் சிரமம் உள்ளது. ஏனென்றால் வாக்குப்பதிவு ரகசியமாக நடந்தது. இதனால் எனக்கு வேறு வழியில்லை. இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர சத்தியப்பிரமாணம் செய்வதை தவிர வேறு மாற்று வழி தெரியவில்லை'' என்றார்.
அதாவது தர்மஸ்தலாவில் நடைபெறும் கூட்டத்தின்போது தான் பாஜக எம்எல்ஏக்களிடம் சத்தியம் வாங்க விஜயேந்திரா முடிவெடுத்துள்ளார். தர்மஸ்தலாவில் புகழ்பெற்ற மஞ்சுநாதேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பாக 'சத்தியமாக பாஜக வேட்பாளருக்கு தான் வாக்களித்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டளிக்கவில்லை. கட்சிக்கு துரோகம் செய்யவில்லை'' என்று சத்தியம் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக கட்சி எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களித்தது பற்றி உண்மை கண்டறிய விஜயேந்திரா தனிக்குழு ஒன்றை அறிவித்தார். அதில் தமிழக முன்னாள் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்பட 4 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் தற்போது தனிக்குழு விசாரணையை தள்ளிவைத்துவிட்டு எம்எல்ஏக்களிடம் சத்தியம் செய்யும்படி கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.
இப்படி கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக தலைமை சத்தியம் வாங்குவதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தமிழகத்தை சட்டசபை மட்டுமே உள்ளது. ஆனால் கர்நாடகாவில் சட்டசபை மற்றும் சட்ட மேலவை உள்ளது. இதில் சட்டசபை உறுப்பினர்களை எம்எல்ஏக்கள் என்பார்கள். இவர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். அதேவேளையில் கர்நாடகாவில் உள்ள சட்ட மேலவை உறுப்பினர்களை எம்எல்சிக்கள் என்பார்கள். இந்த எம்எல்சிக்களை, எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்வார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் எம்எல்ஏக்கள் சேர்ந்து ஓட்டளித்து ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்வார்களே அதுபோன்ற நடைமுறை தான்.
அந்த வகையில் கர்நாடகா சட்ட மேலவையில் மொத்தம் 75 பேர் எம்எல்சிக்களாக இருக்கலாம். இதில் காலியாக இருந்த 7 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 224 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 66 எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்களும், 2 சுயேச்சை எம்எம்எல்ஏக்கள், 2 சிறிய கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியில் உள்ளன.
காலியாக உள்ள 7 இடங்களுக்கு மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்கள், பாஜக சார்பில் 2 வேட்பாளர்கள், ஜேடிஎஸ் சார்பில் ஒரு வேட்பாளர் என்று மொத்தம் 8 பேர் களமிறங்கினர். ஒருவருக்கு 28 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் 4 பேரின் வெற்றி உறுதியாகிவிடும். ஆனால் 5 வேட்பாளர்களுக்கு கூடுதலாக 6 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். அதேபோல் பாஜகவை எடுத்து கொண்டால் 2 பேரின் வெற்றியும் உறுதியான நிலையில் மீதமுள்ள எம்எல்ஏக்களின் ஓட்டுகளை கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஜேடிஎஸ் வேட்பாளருக்கு செலுத்த கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதனால் ஜேடிஎஸ் வேட்பாளர் வெற்றி உறுதியாகும்.
ஆனால் தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 5 பேர், பாஜகவின் 2 வேட்பாளர்கள் என்று 7 பேர் வெற்றி பெற்றனர். ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும், ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களிக்க மேலிடம் சொன்ன பாஜகவின் எம்எல்ஏக்களும் அவருக்கு பதில் காங்கிரஸ் கட்சியின் 5 வது வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியாகி உள்ளது. கட்சி மாறி வாக்களித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா எம்எல்ஏக்களிடம் சத்தியம் வாங்க முடிவெடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications