கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் உரிய நடவடிக்கை: கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது கடைகள் அமைக்க முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார்.
கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடக்கும்.
தற்போது கோவில் திருவிழாக்கள் துவங்கியுள்ளன. வரும் நாட்களில் தொடர்ச்சியாக பல்வேறு கோவில்களின் திருவிழாக்கள் நடைபெற உள்ளது.

வியாபாரிகளுக்கு அனுமதியில்லை
இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவிலில் ஏப்ரல் 20ல் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது கடை அமைப்பதற்கான ஏலம் மார்ச் 31ல் நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள மாரிகுடி கோவில் திருவிழாவின் போது முஸ்லிம் வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர படுபித்ரி, ஓடபண்டேஸ்வரா, பெர்தூர், பெர்னாங்கிளா கோவில் திருவிழாக்களிலும் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

ஹிஜாப் எதிர்ப்பால்...
ஹிஜாப் வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மார்ச் 18 ல் கர்நாடகத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்போது கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரமும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

சட்டசபையில் விவாதம்
இந்த பிரச்சனை சட்டசபையிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான யுடிகாதர் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் ‛‛நான் எந்த மதத்தையும் குறிப்பிட விரும்பிவில்லை. சிலர் சாலையோரம் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைப்பதை தடுத்து வருகின்றனர். மேலும் பொது இடங்களில் பேனர் வைத்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

உரிய நடவடிக்கை
இதற்கு கர்நாடக சட்டத்துறை மற்றும் சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி பதிலளித்தார். அவர் கூறுகையில், இதுபோன்ற விஷயங்களை மாநில அரசு ஒருபோதும் ஊக்குவிக்காது. இதுதொடர்பாக பேனர்கள் வைக்கப்பட்டால் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதற்கிடையே சம்பவம் குறித்து கர்நாடக போலீஸ் அமைச்சர் அரக ஞானேந்திரா போலீசாரிடம் அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications